திங்கள், 5 ஜூன், 2023

பாலியல் தொல்லை - சுவர் ஏறி குதித்து தப்பித்த சிறுவன் - பெண் காப்பாளர் கைது

tamil.asianetnews.கம  - Velmurugan :   நாப்பட்டினம் மாவட்டத்தில் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சுவர் ஏறிகுதித்து தப்பிக்க முயன்ற சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பெண் காப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில் பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில் வசித்து வருகின்றனர். இதில் சில ஆதரவற்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் சேர்த்து 12 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காப்பகத்தில் இருந்து 12 வயது சிறுவன் சுவர் ஏரி குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதனைப் பார்த்த காப்பக நிர்வாகிகள் சிறுவனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனது பாதுகாவலராக உள்ள 40 வயது பெண்மணி தன்னிடம் கடந்த மூன்று நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபடுபடுவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காப்பக நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பெண் காப்பாளரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாள் காவலில் திருவாரூர் சிறையில் அடைத்தனர். பாதுகாவலரே சிறுவனிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது போல் தனியார் குழந்தைகள் காப்பகத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக திரும்ப பெற்று நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு குழந்தைகள் காப்பகம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: