வியாழன், 8 ஜூன், 2023

விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்: பட்டியல் பிரிவு இளைஞர் தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன?

 BBC News தமிழ்  , மாயகிருஷ்ணன். க : விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோவிலுக்கு சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய நேரடியாக மேல் பாதி கிராமத்திற்கு சென்றோம்.
என்ன நடந்தது?


ஊரின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரை தாண்டி தான் ஊருக்குள்ளே செல்ல முடிந்தது. கோவில் முன்புறமும் கோவில் வெளிப்புறமும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலை சுற்றி தடுப்புக் கட்டைகள் அமைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

கோவிலை தாண்டி கிழக்கு பகுதிக்குச் சென்றோம். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரிப்பதற்காக உள்ளே நுழைய முற்பட்ட போது 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்தனர். யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று எங்கள் உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் கடுமையாக எச்சரித்தனர். இதை அடுத்து பலமுறை எடுத்துக் கூறியும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் காலனி பகுதிக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே அங்கிருந்து மீண்டும் ஊருக்குள் நடக்க தொடங்கினோம்.

அங்கு கிராம மக்கள், சிறுவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாதது போலவே வழக்கம்போல் அவர்களது வேலையை செய்து கொண்டிருந்தனர். பெண்கள் சமையல் வேலையிலும், சிறுவர்கள் விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

ராஜலட்சுமி பாட்டி கீரை பறித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோது "என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கின்றோம்" என்று அவர் வேலையை தொடர்ந்தார். இதையே அருகில் சமையல் செய்து கொண்டிருந்த பெண்மணியும் கூறினார். "நாங்கள் நன்றாகத் தான் இருக்கிறோம் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இங்கு நிறைய போலீசார் வந்துள்ளனர்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஊராட்சித் தலைவர் வேதனை
கோவிலுக்கு சீல் வைத்தது தொடர்பாக ஊராட்சி தலைவர் மணிவேல் நம்மிடம் பேசினார்.
“எங்கள் ஊரில் கோவில் தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இது தனி நபரால் ஏற்பட்ட பிரச்சனை. எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை வந்ததில்லை பிரச்சனை தொடர்பாக இதுவரை ஸ்டேஷன்களில் எந்தவித வழக்குகளும் இல்லை. நாங்கள் வேறுபாடு இல்லாமல் இணக்கமாகவே இருந்து வருகின்றோம். கோவிலுக்குள் அவர்களும் இதுவரையில் வந்து வணங்கி செல்கிறார்கள் இது அவர்களுக்கும் தெரியும். நாங்கள் அவர்களை தடுத்ததில்லை,” என்று அவர் கூறினார்.

“எல்லா தரப்பு மக்களும் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்வது வழக்கம். எந்த பிரச்சினையும் இதுவரை வந்ததில்லை. ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர் செய்த பிரச்னையை எங்களால் வெளியில் சொல்ல முடியாது. அவருடைய தாய் தந்தையும் வரவழைத்து அறிவுரை சொல்லித்தான் அந்த இளைஞரை அனுப்பினோம். ஆனால், அந்த இளைஞரை நாங்கள் அடித்ததாக அவர்கள் கூறுகின்றார்,” என்று ஊராட்சித் தலைவர் மணிவேல் தெரிவித்தார்.
படக்குறிப்பு,

மணிவேல், ஊராட்சித் தலைவர்

அடுத்த நாள் காலை தாம் அவர்கள் வீட்டிற்கு சென்று பேசியதாகவும் தம்மிடம் அவர்கள் நன்றாகப் பேசியதாகவும் கூறிய அவர், தொடர்ந்து அரசாங்க அதிகாரிகளும் சமாதான கூட்டம் நடத்தியதாகக் கூறினார்.

“அதில் தான் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரு தரப்பினரையும் உணர்வு ரீதியாக தூண்டிவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவால் தான் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது,” என்று கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது எங்கள் ஊர் பிரச்சனை நாங்கள் சகோதரர்கள் நாங்கள் எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம்,” என்று கூறியவர், “எங்கள் ஊரில் விரைவில் அமைதி சூழல் நிலவ வேண்டும். அதற்கு அரசாங்கமும், அதிகாரிகளும் உதவிட வேண்டும். இரண்டு தரப்பு மக்களையும் வரவழைத்து ஒரே இடத்தில் வைத்து பேச வேண்டும் சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

‘ஓடஓட விரட்டியதை கண்ணால் பார்த்தேன்’

ஆதிதிராவிட சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல முடியாததால் , அப்பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி சிலம்பரசனிடம் ஃபோனில் பேசினோம்.

“கடந்த ஏழாம் தேதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு வழிபடச் சென்ற 4 பேரில் ஒரு இளைஞரை மட்டும் அவர்கள் பிடித்துக் கொண்டனர். மற்றவர்களை நீங்கள் செல்லலாம் என்று கூறிவிட்டனர். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. அந்த இளைஞரை நீ எப்படி கோயில் சென்று வந்தாய் எனக் கூறி அடித்து விட்டார்கள். தொடர்ந்து ஊராட்சி தலைவர் மணிவேல், அந்த இளைஞரின் அப்பா அம்மாவிற்கு போன் செய்து வரச் சொன்னார். பெற்றோர்களும் ஐயா எனது பையன் என்ன தவறு செய்திருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அப்பொழுது வழியில் வேறு சிலர் வழிமறித்து அவர்களை அடித்து விட்டனர். எல்லோரும் அவர்களை ஓடஓடத் துரத்திக் கொண்டு வருவதை நானும் பார்த்தேன்,” என்றார்.

காலம் காலமாக தாங்களும் அந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவதாகத் தெரிவித்த அவர், “கோவிலில் சிலையை வெளியில் வைத்திருப்பார்கள் நாங்கள் மாலை, சுண்டல் எடுத்துச் சென்று படைத்து வருவோம். நாங்கள் தரும் மாலையை குதிரைக்கும் போடுவார்கள்,” என்று விவரித்தார்.

“நான் ஒதுங்கி சென்று கோவில் அருகில் கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு வந்து விட்டேன்,” என்று கூறி சட்டென முடித்துக் கொண்டார்.

‘கையெடுத்து கும்பிட்டு தன் மகனை அழைத்து வந்தார்’

தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் கிருபாநிதி தொலைபேசியில் நம்மிடம் பேசினார்.

“ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏழாவது உபயம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் உபயமாகும். அன்று அந்த இளைஞரை தடுத்து கோவிலுக்கு செல்லக்கூடாது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர் அப்பாவிற்கும் போன் செய்து பையனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அவரும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு அவனை அழைத்து க்கொண்டு வரும் வழியில் சிலர் தாக்கி அடித்துள்ளனர். இதில் கதிரவனுக்கு காயமும் ஏற்பட்டது என்று கூறினார்.” என்றும் தெரிவித்தார். தன் மீதும் கோவில் பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. கூறியது என்ன?

மேல்பாதி கிராமம் திரவுபதி அம்மன் கோவில் சீல் வைத்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.சஷாங் சாய் நம்மிடம் தொலைபேசியில் பேசினார்.

“விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் 145 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி உள்ளேன். 2 ஏ.டி. எஸ்.பி., 6 டிஎஸ்பிக்கள், 31 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும்,” என்றார்.

மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அளித்துள்ள ஊடக அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமம் அருள்மிகு தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே 7.4. 2023 அன்று ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு சுமூகமான தீர்வு காணப்படவில்லை.

தற்பொழுது இரு தரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவுவதாலும் இதனால் பொது அமைதியை பாதுகாத்திடும் பொUட்டு தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கோவிலில் யாரும் பிரவேசிக்க கூடாது என தீர்மானித்து இன்று கு.வி.மு. ச. பிரிவு 145 -இன் கீழ் கோவில் மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை 9.6.23 அனறு 10 மணிக்கு இருதரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வமான விளக்கத்தினை ஆவணங்களுடன் அளித்துக்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவும் அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேல்பாதி கிராமத்தில் நிலைமை என்ன?

இந்நிலையில் மேல் பாதி கிராமப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட் ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேப்போல் கோலியனூர் கூட்ரோ

கருத்துகள் இல்லை: