வெள்ளி, 14 ஏப்ரல், 2023

அபிராமியை சாடிய லட்சுமி ராமகிருஷ்னன்.. எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்?:

 மின்னம்பலம் -christopher : கலாத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் அபிராமி பேசியது முட்டாள்தனமானது என்று நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று(ஏப்ரல் 13) பேசியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கல்லூரி மாணவிகள் இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து அங்கு பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



பின்னர் தலைமறைவான ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி, குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஆதரவாக பேசினார்.

அவர் “நான் 10 ஆண்டுகளுக்கு முன் இக்கல்லூரியில் பயின்றபோது இதுபோன்ற எந்தவித சம்பவமும் நடந்ததில்லை.

கலாஷேத்ரா என்கிற பெயரை ஒழுங்காக கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை சொல்வதை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஹரிபத்மன் மிகவும் நல்லவர்.” என பேட்டி அளித்தார்.

அபிராமியின் இந்த கருத்துக்கு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் மூத்த நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம், நடிகை அபிராமியின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்து பேசிய அவர், “இது ரொம்ப ரொம்ப தவறான விஷயம். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு, அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது, ’ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி’ என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்?

இதற்கெல்லாம் ப்ருஃப்பா கொடுக்க முடியும்? ஒரு பெண் குழந்தை ஸ்கூலில் இவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொல்லும்போது அங்கு என்ன நடந்திருக்கிறது என்று அந்தக் குழந்தைக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த விஷயத்தில் அபிராமி உணர்ச்சிவசப்பட்டு, குழந்தைத்தனமாக தவறாக பேசியுள்ளார்.” என்று கோபமாக தெரிவித்தார். ..கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: