திங்கள், 20 மார்ச், 2023

திருமாவளவன் : போலி (சீமான்) தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியாகவேண்டும்

 tamil.samayam.com :  ‘சீமானிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..’ - சூசகமாக சீண்டிய திருமாவளவன்.!
திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
 இதன் மூலம் சீமானை அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய அரசியலை பேசி வருகிறார்.
ஆனால் அவர் பேசுவது இனத்தூய்மை வாதம் எனவும், திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு சனாதனம் பேசுகிற பாஜகவிற்கு துணை போவதாக திமுக ஆதரவாளர்கள், திராவிட சித்தாந்தவாதிகளும் கூறிவருகின்றனர்.


தந்தை பெரியார் தெலுங்கு வந்தேறி எனவும், தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக சீமான் பேசி வருவது குறிப்பிடதக்கது.
ஆனால் திமுகவிற்கு உள்ள சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பிரிப்பதே சீமானுக்கு கொடுக்கப்பட்ட அஜெண்டா எனவும் கூறிவருகின்றனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை சீமான் மறுத்து வருகிறார். திராவிடத்திற்கும் எங்களுக்கும் பங்காளி சண்டை என சீமான் கூறினாலும், திராவிட பன்றிகள், பொது மேடையில் திமுகவின் சின்னமான கருப்பு சிவப்பு செறுப்பை எடுத்துக் காட்டுவது, கலைஞரின் பேனாவின் சிலையை உடைப்பேன் என பேசுவது என சீமானின் சர்ச்சைகளும் அளவில்லாமல் உள்ளது.

திராவிட பன்றிகளை நேருக்கு நேர் எதிர்க்கும் போது, பன்றியின் வாலில் உள்ள ஒட்டுண்ணிகள் தேவையில்லாமல் கூச்சலிட வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவர் சூசகமாக சாடியதும் பேசு பொருளானது. விஜயநகர பேரரசின் இலட்சினையான காட்டுப் பன்றியும், குறுவாள் கொடியை வைத்து தான் அவர் திராவிட பன்றிகள் என கூறிவருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால் சீமான் மலம் திண்ணும் பன்றியென நினைத்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஆட்சிக்கு வந்தால் வடமாநில தொழிலாளர்கள் மீது கஞ்சா கேஸ், ரேப் கேஸ் போடுவேன் என சீமான் பேசியதும் சர்ச்சையானது. அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இது குறித்து ட்வீட் செய்த பின்பு, சீமான் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்தியுள்ளது. இந்த நிலையில் போலி தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சீமானை சூசகமாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், ‘‘சிலர் வடமாநில தொழிலாளர்களை அடித்து விரட்டுவோம், கஞ்சா கேஸ் போடுவோம் என கூறிவருகின்றனர். அதானி, அம்பானி போன்ற முதலீட்டு வந்தேறிகள் அல்லவா எதிர்க்கப்பட வேண்டியவர்கள், விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை விட்டு விட்டு 100 ரூபாய் வாங்க இடத்தில் 50 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு, 3 வேளை சாப்பிட முடியாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விட்டு தமிழ் முதலாளிகளின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தொழிலாளர்களை விரட்டுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

முதலாளிகளை, சுரண்டல்வாதிகளை விட்டு விட்டு தொழிலாளர்களை விரட்டுவது என்பது அயோக்கியத்தனம். பிறமொழி பேசுவதற்காகவே ஒருவனை அடித்து விரட்டுவது என்பது இனவாதம். இனவாதம் பேசினால் அது இனவெறிக்குள் போய் முடியும். இனவெறி என்பது தமிழ் தேசியம் அல்ல, தமிழ் தேசியத்தின் எதிரி இந்திய தேசியமாகத்தான் இருக்க முடியும்.

அவர்களே கற்பனை செய்து கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாக பெரியாரை எதிர்க்கிறார்கள். பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றால் பார்ப்பனியத்திற்கு துணை போகிறார்கள் என்று பொருள். பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றால் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை எதிர்ப்பதாக பொருள். திராவிடம் என்பது சமூகநீதிக்கான அரசியல், ஆரியத்திற்கு எதிரான அரசியல், அதை முதன்முதலில் உச்சரித்தது பண்டிதர் அயோத்திதாசர்.

திராவிடத்தை எதிர்க்கூடியவன் பெரியாரை எதிர்க்கக்கூடாது, பண்டிதரை தான் எதிர்க்க வேண்டும். ஆரியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். கோல்வாக்கரை எதிர்க்க வேண்டிய இடத்தில் பெரியாரை எதிர்க்கிறார்கள். இது திரிபுவாத அரசியில். இத்தகைய போலி தமிழ்தேசிய திரிபுவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்’’ என்று அவர் பேசினார். இந்த பேச்சிற்கு சீமான் ஆதரவாளர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: