செவ்வாய், 21 மார்ச், 2023

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா

minnambalam.com - Kavi :  ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி சென்று வந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கடந்த 15ஆம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் மூர்த்தி அளித்த பேட்டியில், ஓரிரு நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்புவார். அதிக இருமல்,லேசான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆன்டிபாடி மருந்துகள் கொடுத்திருக்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், ` ஈவிகேஎஸ் இளங்கோவன் 15.03.2023 அன்று ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் குணமடைந்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

கருத்துகள் இல்லை: