புதன், 22 மார்ச், 2023

உக்கிரேனில் ஜப்பான் பிரதமர் .. சீன அதிபரின் ரஷிய வருகைக்கு பதிலடியாகவா ?

 மின்னம்பலம் : Kavi : மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமர் உக்ரைன் சென்றுள்ளார். இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது.
போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீரென உக்ரைனுக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலந்து சென்ற ஜப்பான் பிரதமர், அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.
போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.



ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பான் ஏற்றுள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சகம், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆயுத பலத்தால் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் நடவடிக்கையை ஜப்பான் பிரதமர் உறுதியாக நிராகரிப்பார்.

சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவார்.

ஜப்பானின் பிரதம மந்திரியாகவும், ஜி7 நாடுகளின் தற்போதைய தலைவராகவும் உக்ரைனுக்கான ஆதரவை கிஷிடா நேரடியாக தெரிவிப்பார்” என்று தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது. இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது.

ஆனால், இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பி,

“நிலைமையை மோசமாக்குவதற்கு பதிலாக, பதற்றத்தை தணிக்க ஜப்பான் இன்னும் நிறைய செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு.

அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க உலகத்துடன் இணைந்து சீனா பணியாற்றும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது  என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.    

ராஜ்

கருத்துகள் இல்லை: