வெள்ளி, 29 ஜூலை, 2022

காலை உணவுத் திட்டம்; திங்கள் முதல் வெள்ளி வரை வித விதமான உணவு வகைகள்

 Thangaraj Gandhi  :  நான் துப்புரவு பணியாளரின் மகன்.
என் பள்ளி பருவத்தில் தந்தை இல்லாத சூழலில் என் தாய் துப்புரவு பணிக்கு சென்று தான் எங்களை படிக்க வைத்தார்.
படிக்க வைத்தார் என்றால், பள்ளிக்கு செல்கிறோமா இல்லையா என்பதை கராராக கண்காணிப்பார் என் தாயார்.
கொடுமை என்னவென்றால்,
மூன்று நாள் முன்னாடி ஆக்கிய வெஞ்சனை தான் எங்களின் பெரும்பான்மையான காலை உணவு.. அதை உண்டுவிட்டுதான் பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை. காரணம், என் தாய் தூய்மைப் பணியாளர் ன்பதால், அவர் அதிகாலை 5:30க்கே பணிக்கு சென்றுவிடுவார்.
விவரம் தெரியவரும் வயதில்.. காலை உணவை உண்பதை தவிர்த்தேன். ஏனெனில் சூடான சத்தான உணவாக இருக்காது.
மதியமும் பள்ளி உணவுதான்.


இப்படிதான் எனது கல்லூரி காலம் வரை தொடர்ந்தது.
கல்லூரி முடித்த அடுத்த வருடமே காதல் திருமணம் என்றதாலோ என்னவோ... எனது உணவுப் பழக்கம் வீட்டு உணவின் மீது திரும்பிதெல்லாம் பின்னர் நடந்தது.
இதனூடே நான் சொல்ல வருவது யாதெனில், துப்புரவு பணியாளர்கள் காலை பொழுதை இழந்து உலகின் காலையை துவங்கி வைக்க சென்றுவிடுகின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என்பது சராசரி நம் வீட்டு உணவு போல் இருக்காது.. அனுபவத்தில் சொல்கிறேன்.
அந்தவகையில்.. தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தூய்மைப்பணியாளர்கள் சார்பாக வரவேற்கிறேன். நன்றியும் கூறிக் கொள்கிறேன்..
- தங்கராஜ் காந்தி
ஆதித்தமிழர் பேரவை.

கருத்துகள் இல்லை: