வெள்ளி, 29 ஜூலை, 2022

பாகிஸ்தான் அணி சென்னை செஸ் போட்டிகளில் இருந்து விலகியது! அவசரமாக திருப்பி அழைத்த பாகிஸ்தான்! ஏன்?

Pakistan chess players

மின்னம்பலம் : “செஸ் விளையாட வேண்டாம்! உடனே புறப்பட்டு வாருங்கள்” -வீரர்களுக்கு உத்தரவிட்ட அண்டை நாடு
“செஸ் விளையாட வேண்டாம்! உடனே புறப்பட்டு வாருங்கள்” என பாகிஸ்தான் நாடு உத்தரவிட்டதையடுத்து அந்த நாட்டு வீரர்கள் திடீரென சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதில் தமிழக வீரர்கள் 8 பேர் களமிறங்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 செஸ் வீரர்கள், நேற்று (ஜூலை 28) காலை புனாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு அவர்கள் சென்னை சிறுசேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அந்த 19 பேரும் நேற்று இரவு திடீரென சிறுசேரி நட்சத்திர விடுதியிலிருந்து புறப்பட்டு, புனாவுக்குத் திரும்பிச் சென்றனர். பாகிஸ்தான் செஸ் வீரர்கள் திடீரென புறப்பட்டுச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், பாகிஸ்தான் அரசு, 

அவர்களை செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதையடுத்து, அவர்கள் தாயகம் புறப்பட்டுச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: