வியாழன், 18 ஜூன், 2020

பீலா ராஜேஷுக்கு புதிய பொறுப்பு . பீலா கட்டிய பிரமாண்ட மாளிகை வீடியோ


மின்னம்பலம் : முன்னாள் சுகாதாரத் துறை செயலாளருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்தது போல, தற்போது கொரோனாவை தடுக்க மேலும் 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.
திண்டுக்கல் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக மன்கத் ராம்சர்மா, ஈரோடு - உஷா, கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி, கரூர் - விஜயராஜ் குமார், திருச்சி -ரீட்டா ஹரீஷ் தாக்கர், மதுரை - தர்மேந்திர பிரதாப் யாதவ், புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர், தஞ்சாவூர்- பிரதீப் யாதவ், நாமக்கல் - தயானந்த் கட்டாரியா, சேலம்- நசிமுதீன், விருதுநகர் - மதுமதி, தூத்துக்குடி - குமார் ஜெயந்த் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோன்று முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி, சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமித்து, சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போது பீலா ராஜேஷுக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: