செவ்வாய், 16 ஜூன், 2020

மருத்துவ படிப்புகளில் ஓபிசி-க்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்குகள்! -மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

நக்கீரன் - அதி தேஜா :   :மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி அதிமுக,  திமுக, திக மற்றும் பா.ம.க.  தாக்கல் செய்த வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் முறையே 15 மற்றும் 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடாக மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசு,  சட்டப்படி  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என என  அதிமுக,  திமுக,  திராவிடர் கழகம் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், மத்திய அரசு கல்வி நிறுவனங்களைப் போல,  தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி பாமக சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது,  அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்பது, சமூக நீதியே மறுக்கப்பட்டதாகும். மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற மருத்துவ கவுன்சில் அனுமதித்துள்ளது. தமிழகத்தில்,  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். 

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மாநில அரசுகள் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கும் இடங்களுக்கு மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற  விதிகள் அனுமதித்த போதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். மத்திய அரசு இடங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் போது, மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். பா.ம.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு சட்டப்படி, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், மருத்துவ படிப்பிற்கு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களை வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க வில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, திமுக,  அதிமுக,  திராவிடர் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு,  வரும் திங்கள் கிழமைக்குள் பதிலளிக்கும்படி மத்திய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,  மருத்துவ மேற்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராகச் சேர்க்க மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை: