செவ்வாய், 16 ஜூன், 2020

இந்திய எல்லையில் நேபாளம் 100 எல்லை பாதுகாப்பு அரண்களை அமைக்கிறது

 தினதந்தி :: புதுடெல்லி எல்லையில் கூடுதலாக 100 எல்லை பாதுகாப்பு புறக்காவல் நிலையங்களை அமைக்க நேபாளம் திட்டம்இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் உரசல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு தயாரித்துள்ளதுதான்.

இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை அந்த நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் ஒருமனதாக நிறைவேறியது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா இந்த சேர்க்கை விரிவாக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனக் கூறுகிறது. இந்த பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் வலுவான பொருளாதாரஆதரவு உள்பட பல்வேறு வகையில் தங்களுக்கு சீனாவின் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்தே நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தற்போது நேபாளம் எல்லையில்  கூடுதலாக 100 எல்லை பாதுகாப்பு எல்லை புறக்காவல் நிலையங்களை அமைக்க  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை  அமைச்சகம். இதனை 500 ஆக உயரத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என அந்நாட்டின் அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேபாளம் அமைக்கும் புறக்காவல் நிலையங்கள் வைரபடத்தில் தங்கள் பகுதிகளாக குறிப்பிட்டுள்ள லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவைச் சுற்றிலும் உள்ளன, 

நேபாளத்தின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான கேதார் நாத் சர்மா, காட்மாண்டுவிலிருந்து ஒரு தொலைபேசி நேர்காணலில் பேசும் போது இதை உறுதிப்படுத்தினார்.

"ஆம், அடுத்த நேபாள நிதியாண்டில் (அடுத்த நேபாளி நிதியாண்டு 2020 ஜூலை 16 முதல் 2021 ஜூலை 15 வரை) இந்தோ-நேபாள எல்லையில் உள்ள எல்லை புறக்காவல் நிலையங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 121 இலிருந்து 221 ஆக உயர்த்தப் போகிறோம். மேலதிக திட்டங்களைப் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது” என கூறினார். 

நேபாளத்தின் மூத்த ஐபிஎஃப் அதிகாரி ஒருவர், "எல்லைக் குற்றங்கள் நடைபெறாமல் சோதனை நடத்தவும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நாட்டிற்குள் நுழைவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்" நாடு புறக்காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக தொலைபேசியில் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கூறி தகவல் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை மேலும் உறவை மோசமாக்கும்.

கருத்துகள் இல்லை: