ஞாயிறு, 14 ஜூன், 2020

விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

வினவு : "நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி
தின்னலாம்" என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி.</ g>இ ந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (AAI) அதானி குழுமம் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் கையில் எடுத்த விமான நிலையங்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டுள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக வானூர்திப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தமக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று காரணம் கூறியுள்ளது அதானி குழுமம்.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் மத்திய மோடி அரசு, 6 வானூர்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்கள் இதில் அடங்கும். இது இவ்விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான பொதுத்துறை – தனியார் கூட்டு (PPP) அடிப்படையிலான ஒப்பந்தத்திற்கான அழைப்பாகும்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை மீறி இந்த ஏலத்திற்கான பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாக நியூஸ் கிளிக் எனும் இணையதளம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மோடி அரசை அம்பலப்படுத்தியது. பிற அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் கொடுத்த ஆலோசனைகளை மீறியே, வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அதானி குழுமத்திற்கு 6 வானூர்தி நிலையங்கள் வழங்கப்பட்டன.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி இந்தத் துறையில் கால் பதித்திருக்கிறது அதானி குழுமம். விமான தரையிறக்கம் மற்றும் நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றின் மூலமும், விமான நிலையத்திலேயே விடுதிகள், மால்கள் மற்றும் விமான நிலைய கிராமம் போன்ற கேளிக்கை அம்சங்களின் மூலமும் வரக்கூடிய பெருமளவிலான வருவாயைக் கணக்கில் கொண்டுதான் மோடி அரசின் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை மும்முரமாகப் பெற்றது அதானி குழுமம்.
இதன்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 180 நாட்களுக்குள் ரூ. 1500 கோடியைச் செலுத்தி முறைப்படி விமான நிலையத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில விமான நிலையங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், லக்னோ, மங்களூரு, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களை மட்டும் உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி 2020-ல் அதற்கான இறுதி ஒப்பந்தத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்துடன் கையெழுத்திட்டது அதானி குழுமம். இதன்படி அதானி குழுமம் ஏப்ரல் மாதத்திற்குள் முழுத் தொகையையும் கொடுத்து இந்த மூன்று விமான நிலையங்களின் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஜூன் மாதம் முதல் வாரத்தில், தற்போது இருக்கும் கொரோனா நிலைமைகளைச் சுட்டிக் காட்டி வருமான இழப்பு ஏற்படும் என்பதால், இன்னும் 6 மாதம் கழித்து அந்த மூன்று விமான நிலையங்களையும் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது அதானி குழுமம்.
மேலும் தனது அறிக்கையில், வானூர்தித் துறையில் பெருமளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஒட்டி, இது குறித்து வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுக்க இருப்பதாகவும், அதற்காக இன்னும் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை தள்ளிப் போடப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்பு இருக்கும் என்பதைத் தாம் உணர்வதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.
“எதிர்பாராத / கட்டுப்படுத்த முடியாத சூழல்களில்” ஒப்பந்தத்தை தள்ளிவைப்பது பற்றிய விதிப்பிரிவின் கீழ் இந்த திட்டத்தை இன்னும் 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்கும்படி இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஒரு கடைக்கு முன்பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்த பின்னர், லாபம் குறைவாக வருவதால் வாடகை கொடுக்க முடியாது. 6 மாதம் கழித்து வாடகை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது, அதானி குழுமத்தின் இந்த வாதம்.
ஒப்பந்தப்படி ஏப்ரல் மாதம் வானூர்தி நிலையத்தை கையில் எடுத்த பின்னர், வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குவியத் தொடங்கி இருந்தால், நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வருகிறது என திருப்பிக் கொடுத்திருப்பாரா அதானி ? லாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு ! இதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் பின்னணி !
பொதுவாகவே, “நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்” என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி. லாபமாக இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், சொத்துக்களையும், ஒரு அற்பமான தொகையை ஈவுத்தொகையாகக் கொடுத்து விட்டு மீதி லாபத்தைக் கல்லா கட்டுவதுதான் இந்த பொதுத்துறை – தனியார் கூட்டுத் திட்டங்களின் அடிப்படையே.
இந்த நிலைமையில் கடந்த மே மாதம், வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய 6 விமான நிலையங்களை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பையும், அதானி குழுமத்தின் 6 மாத அவகாச அறிவிப்பையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், தற்போதைய கொரோனா மற்றும் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி, அடிமாட்டு விலைக்கு விமான நிலையங்களை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு அரசு தயாராகி விட்டதையே காட்டுகிறது

கருத்துகள் இல்லை: