புதன், 17 ஜூன், 2020

தேசபக்தி போர்வையில் திரைப்பட விளம்பரம்

தேசபக்தி நிவாரணமா? படத்துக்கான விளம்பரமா?மின்னம்பலம் : தேசபக்தி நிவாரணமா? படத்துக்கான விளம்பரமா? அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், வெற்றி பெற்ற சினிமா படங்களின் கதாநாயகர்கள் போன்றவர்களின் முகமூடி அணிந்து அவரது தொண்டர்கள், ரசிகர்கள் கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடுவது தமிழகத்தில் அன்றாட வழக்கமாக இருந்து வருகிறது
இந்த சூழ்நிலையில் இந்தியா-சீன எல்லையில் நடந்த ராணுவ தாக்குதல்களில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரை சினிமா நடிகருக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விருமாண்டி இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளில் வரும் வசனங்கள் சாதி மத, அரசியலைத் தாண்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்துத் தான் உலக அரசியல் நடக்கிறது.
“இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க, 2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு, விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்” “நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிட்டு இருக்காங்க, அந்த (சோலார்) கரெண்ட் கம்பெனி காரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கிறான் பிளேட் கழுவ. பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா?” ஆகிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த வசனங்களை விஜய்சேதுபதி பேசியிருந்தார். இந்நிலையில் ஜூன் 15 அன்று, இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர், சீன ராணுவத்தினர் தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் தரப்பில் வீீீீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பது தெரியவந்துள்ளது. பழனிக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் இராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனியின் மரணம் தொடர்பாக க/பெ ரணசிங்கம் படத்தைத் தயாரித்து வரும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

"உறைய வைக்கும் குளிரில் காவலுக்குப் பசியுடனும், தாகத்துடனும், குளிருடனும் நின்று, தங்கள் குடும்பத்துக்குக் கதைகள் சொல்ல திரும்பி வரமுடியாத மனிதர்களுக்கு… உங்கள் தியாகத்துக்கு தலை வணங்குகிறோம். உங்கள் ஆன்மாக்கள் அமைதி அடையட்டும். தமிழ் வீரன் பழனியின் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் நம்மில் ஒருவர் போன்றவர். அவர் நம் ரணசிங்கம். ஒரு போர் வீரரின் மரணத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இங்கே எங்களால் செய்ய முடிந்த சிறிய உதவி. பழனியின் தியாகத்துக்காக அவரது குடும்பத்தினருக்கு 5 இலட்ச ரூபாய் வழங்குகிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்.” இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஒரு திரைப்பட நிறுவனம் மரியாதை செய்ததற்குப் பாராட்டுகள் கிடைத்து வரும் அதே நேரம், மறைந்த இராணுவ வீரரை வெளிவராத ஒரு திரைப்படத்தின் கதாநாயகனோடு ஒப்பிட்டுப் பேசி படத்திற்கு விளம்பரம் தேடுவதா? என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
-இராமானுஜம்

கருத்துகள் இல்லை: