செவ்வாய், 16 ஜூன், 2020

ஜெயகாந்தன் : பெரியார் காலில் விழ நினைத்தேன் .

Nilavinin Manickam:
பெரியாரின் வியத்தகு பண்பு!
எழுத்தாளர் ஜெயகாந்தன்
பெரியாரை மேடையில் விமர்ச்சித்தபோது பெரியார் பாராட்டியதாக இவ்வாறு எழுதுகிறார்.

பெரியாரின் அந்தப் பண்பிற்காக அவர் காலில் விழுந்து வணங்கத்தோன்றியதாக எழுதுகின்றார்.
'எனது திருச்சி மகாநாட்டுப் பேச்சு, நான் மதிக்கிற பிராமண நண்பர்களிடமும் எனக்கு அறிமுகமில்லாத பல பிராமணர்களிடமும் மிகுந்த பாராட்டு உணர்ச்சியை ஏற்படுத்தியது.
பிராமணரல்லாத பலர் என்னையும் ஒரு பிராமணன் என்று அந்தப் பேச்சின் விளைவாய் எண்ணிக் கொள்ள நேர்ந்தது. பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே நான் இவ்வளவும் பேசியதால் திராவிடக் கழக நண்பர்களுக்கு என்பால் கோபமெழுந்தது இயற்கையே.
என்னைப் பொறுத்தவரை அந்தப் பேச்சை நிகழ்த்துவதற்கு எனக்கு எந்தவிதத் துணிச்சலும் தேவையாயிருக்கவில்லை. மனத்தாலும் அறிவாலும் அனுபவங்களாலும் அறிந்த, இதற்கு முன்னால் ஏற்கனவே பலராலும் பன்னிப் பன்னிச் சொல்லப்பட்ட உண்மைகளைப் பகிரங்கமாகப் பேசுவதே ஒரு வீர சாகசமாக ஆகிவிட்டது போலும்.

அந்தத் திருச்சி மகாநாட்டில் கலவரமோ குழப்பமோ நேராததற்கு ஒரே காரணம் பெரியார் அவர்களும் மேடையில் இருந்தது தான்.
பெரியார் எனது பேச்சை மிகவும் உன்னிப்பாய், செவி மடலைக் கையால் குவித்துக் கொண்டு சிரத்தையோடு கேட்டார்.
இடையிடையே தனக்கு உடன்பாடான கருத்துக்களை நான் கூறுகிறபோதும் – மக்கள் கரகோஷம் செய்த பொழுதும் தானும் தனது கைத்தடியால் தரையில் தட்டித் தனக்கு மாறுபாடான கருத்துக்களை நான் பேசிய சந்தர்ப்பத்திலும் ஆரவாரித்து என்னை உற்சாகப்படுத்தினார் பெரியார்.
அவரது இந்த நாகரிகம் மிக மேன்மையானது என்று நான் அப்போது உணர்ந்தேன்.
அறிமுகமில்லாதவர்கள், எவ்வளவு உயர்ந்தவர்களாயினும், இயல்பாக ஒரு சந்தர்ப்பமோ சூழ்நிலையோ உருவாவதற்கு முன்னால் நானாகப் போய்ப் பேசி உறவாடுகிற இயல்பு எனக்கு இல்லாத ஒன்று.
பிரசங்கம் முடிந்ததும் பல திராவிடக் கழக அன்பர்கள் எனது பேச்சால் தங்கள் மனம் புண்பட்டு விட்டதாகப் பெரியார் அவர்களிடம் சென்று முறையிட்டுக் கொண்டனர்.
அப்போது பெரியார் அந்தத் தி.க. தோழர்களுக்கு மிகவும் கண்டிப்பாக அறிவுரை வழங்கினார்: “பொது வாழ்க்கையிலே அப்படி எல்லாம் மனசு புண்படக் கூடாது. இவர் ஒருத்தர் தான் நமக்குப் பதில் சொல்லி இருக்காரு. நாம் எவ்வளவு பேரைக் கேள்வி கேட்டிருக்கோம்? அவங்க மனசு புண்படுமேன்னு யோசிச்சோமா? அப்படியெல்லாம் யோசிச்சிக்கிடிருக்க முடியாது”.
அவரது இந்த அறிவொழுக்கம் (intellectual honesty) எனக்கு அவர் அன்று உபதேசித்த ஓர் பாடமாயிற்று.
பின்னர் அவர் என்னை அழைத்தார். மிக மரியாதையாக, ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதி போல, மிகவும் பண்போடு, இருபத்து நான்கு வயதே ஆன என்னை, “வாங்க, ஐயா!” என்று கரங்கூப்பி அழைத்தார்.
அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால், அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது உண்மை!'
அவர் என்னை விசாரித்தார். “நீங்க பிராமணப் பிள்ளையா?” “இல்லை” என்றேன். “ரொம்ப சந்தோஷம்!” என்றார். நான் விடை பெற்றுக் கொண்டேன்.
நன்றி: (மூலம்: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்)
இந்த Intellectual Honesty யாரிடம் இருக்கிறது?

கருத்துகள் இல்லை: