வியாழன், 24 ஜனவரி, 2019

அமைச்சர் நிலோபர் ,எம்பி அன்வர் ராஜா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!..

அமைச்சருக்கு எதிராக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!மின்னம்பலம் : மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மதுரை கே.கே.நகரில் உள்ள வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சர்தார் பாஷா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், “2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 30 உதவி பேராசிரியர்களில் பலர் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கான உரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை.பல லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் நடந்துள்ளது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் 30 லட்சமும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் 35 லட்சமும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்தப் பணம் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வக்பு போர்டு வாரிய தலைவர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இம்மனு நேற்று (ஜனவரி 23) நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களைச் சரிபார்த்த நீதிபதி, “மனுதாரர் சிபிஐ விசாரிக்க கடந்த நவம்பர் மாதமே புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆவணங்களைப் பார்க்கும்போது தவறுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது போல் உள்ளது” என்று கூறி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.
விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், விசாரணைக்குத் தேவையான வசதிகளைத் தமிழக அரசு செய்து தரவேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: