வெள்ளி, 25 ஜனவரி, 2019

மொழிப்போராட்டம் வரலாறு .. அனைத்து மாநில மொழிகளையும் இரத்தம் சிந்தி காத்த தமிழகம்

Muralidharan Pb : இத்தனை களோபரங்களிக்கிடையே நாம் மொழிப்போர் பற்றிய

செய்தியை மறக்கக்கூடாது.
மொழிப்போராட்டம் வரலாறு சுருக்கமாக:
உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்த்ரி ஒரு மசோதாவை வெளியிட்டார். இந்தியா முழுவதும் இனிமேல் ஹிந்தி தான் கட்டாயமாக்கப்படும். ஆங்கிலத்தை பயன்டுத்தலாம்(May be), ஹிந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் (Shall be). திமுக இதை தமிழுக்கு நேர்ந்த அநீதி என்றது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டம் நடத்த திமுக தன்னை தயார் படுத்திக்கொண்டது. போராட்ட குழு தலைவராக கலைஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
கிளைக்கழக பிரதிநிதிகளுக்கு அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதன் படி போராட விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை பட்டியலாக தயார் செய்து அனுப்ப கோரினார். அண்ணா பிறந்தநாளான செப்டெம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடக்குமென அறிவித்தார்.

தவிர நாடகங்கள், அறிக்கைகள், சுவரொட்டிகள் என பல திட்டங்களை வகுத்தார் கலைஞர். எல்லா மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்த திட்டம் தீட்டினர். வெறும் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று கோஷமிடாமல் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதி, திருவிக போன்றவர்களின் அனல் கக்கும் வசனங்களை வைத்து நாடங்கங்கள் நடத்தினர். மாற்றான் தோட்டத்து மல்லிகை என் பெயரிட்டார். இன்னொரு நாடகமும் போடப்பட்டது வஞ்சியும் காஞ்சியும் எழுதியவர் மாறன்.
பெருந்தலைவர் காமராஜர் K பிளான் ஒன்றை விதித்தார். அதன் படி அவர் பதவி விலகி பாக்காதவச்சலம் முதல்வரானார். காங்கிரஸ் காமராஜரை அகில இந்திய கட்சி தலைவராக்கியது. பின்னர் எத்தனை போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு தனது ஹிந்தி சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அண்ணா அந்த சட்டமசோதாவை தீயிட்டு கொளுத்தினார். பின்னர் ஜனவரி 26தேதி அன்று போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்று முழக்கமிட்டார். அண்ணா, கலைஞர் உட்பட நிறைய தலைவர்களை கைது செய்து ஆறு நாட்களில் விடுதலை செய்தது.
இந்த போராட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. சின்னசாமி என்ற இளைஞன் முதல்வரை சந்தித்து ஆவேசமாக பேசியதன் விளைவாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டான். பிறகு திருச்சி சென்று ஒரு கடிதத்தை எழுதி தமிழுக்காக உயிரை மாய்த்துக்கொண்டார். மொழி போராட்டத்தின் முதல் பலி. பின்னாட்களில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இறந்துவிட்ட பிறகு மொழிக்கு எதிராக மசோதாவை கொண்டுவந்த சாஸ்த்ரி பிரதமரானார். ஆக பிரச்சனை பெரிதானது. போராட்டங்கள் தீவிரமடைந்தது.
குடியரசுத் தினத்தன்று துக்கநாள் அனுசரிப்பது துரோகச்செயல். அதைச் செய்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். போராட்டத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க அரசு தயாராகிவிட்டதை உணர்த்தியது அந்த அறிவிப்பு. ஆனால் குடியரசு நாளை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று விளக்கம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.
"குடியரசு நாள் என்பது குழந்தை. அதன் தலையில் இருக்கும் நச்சுப்பழம் இந்தி. திமுக குறிபார்ப்பதில் கெட்டிக்காரக்கட்சி. குடியரசு நாளுக்கும் அவமதிப்பு வராமல் இந்தி ஏகாதிபத்தியத்தையும் பிளந்திடத் தவறாமல் திமுக அம்பு எய்து வெற்றிபெறும் திறமைபெற்றது." என்று கூறினார்.
போராட்டத்திற்கு 1 நாளுக்கு முன் முன்னெச்சரிக்கையாக அண்ணா,கலைஞர், பேராசிரியர், நாவலர் என்று முன்னணி தலைவர்கள் அனைவரும் கைதானர்கள். இவ்விடத்தில் தான் மாணவர்கள் போராட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. சுமார் 200 பேர் இந்த போராட்டத்தினால் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாட்டின் கருப்பு நாட்களில் இதுவும் ஒன்று.
ஆனாலும் மாணவர்கள் அமைதிகொள்ளவில்லை. காரணம், மத்திய அரசை அவர்கள் நம்பவில்லை. இந்நிலையில் திடீரென அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மாணவர் தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்துப் பேசினர். ‘இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. ஆகவே, மாணவர்கள் தங்கள் நேரடி நடவடிக்கையை நிறுத்திவையுங்கள்’ என்றார் அண்ணா. நிலைமையை சீராக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும். ஆகவே, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் மத்திய அமைச்சர் குல்சாரி லால் நந்தா.
அமைதி திரும்பியது என்று நினைத்தபோது அடக்குமுறை பாய்ந்தது, #கலைஞர் கருணாநிதி மீது! ஆம் பிப்ரவரி மாதம் ஒரு நாள் நள்ளிரவில் கலைஞர் விட்டுவாசலில் காவல்துறையினரால் வழி மறிக்கப்பட்டு, எழும்பூர் ஆணையாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். கைதுக்கு காரணம் மாணவர்களை பெரிய போராட்டத்திற்கு தூண்டி விட்ட முதன்மை குற்றவாளி கலைஞர் கருணாநிதி. இவர் 30(1) இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் திமுக உறுப்பினர் ஆவார். நெஞ்சுவலியோடு அவரை மதுரைக்கு கொண்டு சென்று பிறகு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது. இந்த பிரச்சனையை அண்ணா, செழியன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப, பஉ சண்முகம் போன்றவர்கள் சட்டமன்றத்தில் எழுப்பினார்கள். அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அவரைக் காண வந்த அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும் போது,என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்குக் கொடியவரல்ல பக்தவத்சலம். பாம்பும் பூரானும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியைப் பூட்டிவைத்திருக்கிறார்கள்.
அண்ணாவின் பேச்சுக்குப் பிறகு இன்னொரு வழக்கும் கலைஞர் கருணாநிதி மீது தொடுக்கப்பட்டது. முரசொலியின் வெளியான கட்டுரைகளுக்காக இந்தியப் பாதுகாப்புச்சட்டம் 41(5)ன் படி புதிய வழக்கு. சென்னையில் நடக்க இருந்த விசாரணைக்காக பாளையங்கோட்டையில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணைகள் நடந்துகொண்டிருந்த சூழ்நிலையில் திடீரென பாதுகாப்புச் சட்டத்தின் 30(1) பிரிவினை ரத்து செய்தது தமிழக அரசு. அதன் எதிரொலியாக, 62 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு கலைஞர் கருணாநிதிக்கு விடுதலை கிடைத்தது.
இதே போன்ற எந்த ஒரு போராட்டத்தையும் பார்க்காதவர்கள் அவருக்கு பின்னர் வந்த முதலமைச்சர்கள் என்பது நமது சாபக்கேடு.

கருத்துகள் இல்லை: