திங்கள், 21 ஜனவரி, 2019

நடிகர் அஜித் : எனது புகைப்படமோ பெயரோ அரசியலுக்கு பயன்படுத்த கூடாது ! .. சினிமாதான் எனது தொழில் ..

அறிக்கைஅஜித்கலிலுல்லா.ச -கார்த்தி - விகடன் : நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ``நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட எந்த ஆர்வமும் இல்லை தேர்தலின் போது வாக்களிப்பது மட்டுமே அரசியலில் என் உச்சகட்ட தொடர்பு” என்று  அரசியல் மீதான தனது நிலைப்பாட்டை அவர் அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளார். `அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும்’ என தமிழிசை கூறியுள்ள நிலையில் அஜித் அறிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை பெரும்பாலும் தவிர்த்துவருபவர். அவர் பேட்டி கொடுக்கமாட்டாரா என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அண்மையில் திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாற்றுகட்சியினர் பிஜேபியில் சேரும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை, `திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியில் இணைந்த அஜித் ரசிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். இறுதியாக அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்” என்றார். இந்த நிகழ்வு தொடர்பாக நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை” என்றார்.
மேலும் ``என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ,  என் ரசிகர்களின் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்கிற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும். என் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும். சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு’ வாழு வாழ விடு” என்று அறிவுருத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை: