புதன், 27 ஏப்ரல், 2016

யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து..கோகுல்ராஜ் கொலை வழக்கில்....

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.நாகமுத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. கடந்த 2015 டிசம்பர் 25-ல் யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், யுவராஜ் மீதான குண்டர் தடுப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி சுமிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உட்பட 17 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். அதில் யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: