புதன், 27 ஏப்ரல், 2016

சோனியா காந்தி : மீனை கூட பாதுகாக்க முடியாத மோடியால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும்

கொல்கத்தா, இந்திய கடல்பரப்பில் மீனை கூட வெளிநாட்டு மீனவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியாத மோடியால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் இதுவரையில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ளது. 5-வது கட்டமாக 53 தொகுதிகளுக்கு 30-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திய கடல்பரப்பில் வெளிநாட்டவர்களிடம் இருந்து மீனை கூட பிரதமர் மோடியால் பாதுகாக்க முடியவில்லை, அவரால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும் என்று விமர்சனம் செய்து உள்ளார். 

”பாரதீய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மீனவர்களின் இழுவை படகுகளுக்கு தடை விதித்துவிட்டது, ஆனால் வெளிநாட்டு மீனவர்கள் வெளிப்படையாகவே இந்திய கடல்பரப்பில் மீன்பிடித்து வருகின்றனர். எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக அதிகமான வாக்குறுதிகளை பிரதமர் மோடி கொடுத்து வருகிறார், ஆனால் உங்களுடைய மீனை அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் எப்படி அவர் நம்முடைய எல்லையை பாதுகாப்பார்? சமீபத்திய பதன்கோட் தாக்குதலே இதற்கு உதாரணம் ஆகும்,” என்று சோனியா காந்தி கூறிஉள்ளார். 
கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களின் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது, மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மீனவர்களை அவர்களது பணியை விட்டுசெல்ல வைத்து உள்ளது என்றும் சோனியா காந்தி கூறிஉள்ளார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: