சனி, 21 டிசம்பர், 2013

ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை :பொறுமையை சோதிக்க வேண்டாம்

டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடிய தனி மெஜாரிட்டி பெறவில்லை. 32 இடங்களை பெற்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. டெல்லியில் ஆட்சியமைக்க 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு, 8 இடங்களை பெற்ற காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரசின் ஆதரவை ஏற்க 18 நிபந்தனைகளை அக்கட்சி விதித்தது. அவற்றில் பெரும்பாலானவை நிர்வாக ரீதியானது என்று கூறிய காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதை மீண்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சியமைப்பதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது தொடர்பாக டெல்லி மக்களுக்கு அக்கட்சி சுமார் 25 லட்சம் கடிதங்களை அனுப்பியது. இவற்றுக்கு பெரும்பாலான மக்கள், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைக்க ஆதரவு தெரிவித்து பதில் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், ‘‘டெல்லியில் நிலையான அரசு அமையவே நாங்கள் விரும்புகிறோம். அதன் அடிப்படையிலேதான் டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் காங்கிரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்’’ என்றார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: