திங்கள், 16 டிசம்பர், 2013

ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து பறிபோகிறது

ஐதராபாத் : உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, ஆந்திர மாநில அரசு, 'குடும்பத் தலைவர்' அந்தஸ்தை பெண்களுக்கு வழங்கி, அனைத்து குடும்பத்தினருக்கும், புதிய ரேஷன் கார்டு வழங்க உள்ளது.மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், நட்சத்திர திட்டங்களில் ஒன்றாக, உணவு பாதுகாப்பு திட்டம் கருதப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவர் அந்தஸ்து, அந்த குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினரிடம் இருந்து, மூத்த பெண்களுக்கு மாறுகிறது. குடும்பத்தின், சம்பாதிக்கும் நபராக, குடும்பத் தலைவராக, ஆண் இருந்தாலும், இனிமேல், குடும்பத் தலைவர் என்ற அந்தஸ்து, பெண்களுக்குத் தான் வழங்கப்படும்.அந்த வகையில், அந்த குடும்பத்தில் உள்ள, 18 வயது நிரம்பிய பெண்களில், யார் வயதான பெண்ணோ, அந்தப் பெண்ணுக்கு, குடும்பத் தலைவர் அந்தஸ்து வழங்கப்படும். ஆண்களிடம் இருந்த, அந்த அந்தஸ்து பறிக்கப்படுகிறது.அந்த குடும்பத்தில், 18 வயது நிரம்பிய பெண் இல்லை என்றால் மட்டும் தான், மூத்த ஆண் உறுப்பினரிடம், அந்த அந்தஸ்து இருக்கும்.
குடும்பத்திற்கு, மாதம், 20 கிலோ உணவு தானியங்களை, கிலோ, 5 ரூபாய்க்கு வழங்க வகை செய்யும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள, ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு, புதிய ரேஷன் கார்டுகளை வழங்க உள்ளது.மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குடும்பத் தலைவர் அந்தஸ்தை பெண்களுக்கு மாற்றி வழங்கி, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.


மூன்று மாதங்களில் நிறைவு:

''இந்தப் பணி, இரண்டு நாட்களுக்கு முன் துவக்கப்பட்டுள்ளது; மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும்,'' என, மாநில உணவு வழங்குதல் துறை கமிஷனர், சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு, குடும்பத் தலைவர் அந்தஸ்து மாற்றப்படுவதற்கு, சில காரணங்கள் கூறப்படுகின்றன.அதாவது, குடும்பத்திற்கு உணவு அளிப்பது பெண்கள் என்பதால், அவருக்குத் தான், குடும்பத் தலைவர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. போதை போன்ற தீயபழக்கங்களுக்கு, ஆண்கள் அடிமையாகியுள்ளதால், அவர்களில் பெரும்பாலானோர், ரேஷன் கார்டுகளை அடகு வைத்து, மது குடிக்கின்றனர்.மூத்த பெண்களை, குடும்பத் தலைவராகக் கொண்டு, ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்படுவதால், போலி ரேஷன் கார்டுகள் ஒழியும் எனவும், ஆந்திர அரசு நம்புகிறது.'இதுவும் ஒரு வகையான, ஓட்டு வங்கி அரசியல் தான்' என, காங்கிரசுக்கு எதிரான, உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு எதிரான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. dinamalar.com 

கருத்துகள் இல்லை: