சனி, 21 டிசம்பர், 2013

பெண் அதிகாரி் அனுராதாவின் நேர்மைக்கு ADMK அரசு தந்த டிரான்ஸ்பர் ! அதிமுக பிரமுகருக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலையில் ஒயிட்னர் கலந்து இருப்பது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஉணவுப் பொருட்களில் கலப்படம் என்பது, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். இதுபோன்றவர்கள் தாய்பாலில் கூட கலப்படம் செய்ய நினைக்கும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் என்று உச்ச நீதிமன்றமே கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆணித்தரமான இந்த வார்த்தைகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு கொண்ட ஆட்சியாளர்கள் அதை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலையில் நடத்தப்பட்ட ஆய்வில், வெண்மை நிறம் வர ஒயிட்னர் கலந்து இருப்பது தெரிய வந்தது. ஒயிட்னர் என்று சாதாரணமாக சொல்லிவிட்டாலும், அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் மிகக் கொடூரமானவை. கேன்சர், வயிற்றில் கட்டி, வயிற்றுப் போக்கு என்று பல்வேறு பாதிப்புகளை, வயதுக்கு தகுந்தபடி கொண்டு வரும் ஒரு விஷப் பொருள்.

குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்படும் பாயசத்துக்குதான் ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், பணத்தாசை பிடித்தவர்கள், ஜவ்வரிசியில் ஒயிட்னரை கலந்துள்ளனர். இதை ஆய்வு செய்து கண்டுபிடித்ததற்காக, தகாத வார்த்தைகளால் அந்த பிரமுகர் திட்டியதாக, சம்பந்தப்பட்ட அதிகாரியே போலீசில் புகார் செய்துள்ளார். இந்த வகையில் அந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் அனுராதாவை பாராட்டியே தீரவேண்டும்.

தாய்மை மனதுடன், இதுபோன்ற செயலை தடுத்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன், எள்ளளவும் அரசியல்வாதிகளை கண்டு பயமில்லாமல் சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி, ஆலையை மூடுவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். இதன் விளைவு, சினிமாவில்  வருவதை போல, பெண் அதிகாரி அனுராதா சாதாரண ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவருக்கு அரசு தந்த பரிசா?
ஆனால், துணிச்சலான, நேர்மையான, கடமை உணர்வுமிக்க அந்த அதிகாரிக்கு, இந்த பணியிட மாற்றம் எந்த பாதிப்பையும் தரப் போவதில்லை. ஆனால், ஒரு பெண் முதல்வரே ஆட்சி செய்யும் மாநிலத்தில், நேர்மையான பெண் அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைதான் பரிதாபமாக உள்ளது. இதுபோன்ற செயல்களை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலமே, நேர்மைக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதை அதிகாரிகள் மட்டுமின்றி மக்களும் நம்பும் நிலை ஏற்படும். தமிழக அரசின் இலட்சினையில் உள்ள வார்த்தைகள் ஜெயமாவது முதல்வரின் கையில்தான் உள்ளது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: