சனி, 12 ஜனவரி, 2013

விஜயகாந்த்: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை

தஞ்சாவூர் :""வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை,'' என, தஞ்சையில் நடந்த, தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில், விஜயகாந்த் உறுதியாக தெரிவித்தார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலை தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் பாராட்டி பேசியதை வைத்து, தி.மு.க.,வுடன் கூட்டணி வரும் போல் தெரிகிறது என, தே.மு.தி.க., தொண்டர்கள் நினைத்திருந்தனர். ஆனால், மாலையே விஜயகாந்த்தின் நடவடிக்கை மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தஞ்சையில், தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நாஞ்சிக்கோட்டை ரோட்டில் நேற்றிரவு நடந்தது.


டெல்டா மாவட்டத்தில் வறட்சி பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பையை வழங்கி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:தஞ்சை மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க தே.மு.தி.க., பொதுக்கூட்டம், 11ம் தேதி நடக்கும் என, அறிவித்தவுடன், தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில், எட்டு அமைச்சர்களை கொண்ட குழுவினர் நிதியமைச்சர், பன்னீர்செல்வம் தலைமையில் முகாமிட்டு, ஆய்வு நடத்துகின்றனர்.அ.தி.மு.க.,வுடன் ஒரு முறை தான் கூட்டணி வைத்தேன். அதுவும் தொண்டர்கள் கூறியதற்காக வைத்தேன். பாடம் கற்றுக்கொண்டதால் பாதியில் விலகி விட்டோம்.வரும் லோக்சபா தேர்தலில், யாருடனும் கூட்டணி இல்லை என்பதை இந்த கூட்டத்தில் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இதில், தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். காவிரி நீரை பெற்றுத்தராமல் முதல்வர் ஜெயலலிதா கபட நாடகம் ஆடுகிறார். இதை மக்கள் நம்ப வேண்டாம்.

என்மேல் வழக்குக்கு மேல் வழக்குகளை ஆளுங்கட்சி போடுகிறது. இதை கண்டு பயப்பட மாட்டேன். ஏனென்றால் நான் கூட்டத்தில் பேசுவதெல்லாம், என் சொந்த கருத்து அல்ல; அது, அ.தி.மு.க.,வினரே பேசி வரும் கருத்து. அதைத் தான் நான் கூட்டத்தில் பேசுகிறேன்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்காக, 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை, ஜெயலலிதா அரசால் வழங்க முடியவில்லை.தமிழகத்தில் மழை பெய்யாததற்கு கூட ஆள்பவர்கள் கெட்டவர்களாக இருப்பது தான் காரணம்.இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நேற்று காலை சாமி கும்பிட வந்த விஜயகாந்த், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு போடாதது, அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது' என பாராட்டியிருந்தார். கருணாநிதியை பாராட்டுவதை வைத்து, தொண்டர்கள், தி.மு.க., வுடன் கூட்டணி வரும் போல் உள்ளது என முணுமுணுத்தனர்.ஆனால், மாலையில் தஞ்சையில், தடாலடியாக யாருடனும் கூட்டணி இல்லை என அறிவித்ததை கேட்டு, குழம்பிய தொண்டர்கள், நாளைக்கு என்ன சொல்வரோ என முணுமுணுத்தனர்.

பெருந்தன்மை மிக்கவர் கருணாநிதி: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் "ஜிங்சாக்'

ஸ்ரீவில்லிபுத்தூர்:""ஜெயலலிதா மீது, இதற்கு முன் முதல்வராக இருந்த கருணாநிதி, அவதூறு வழக்கு ஏதும் போடாதது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது,'' என, ஸ்ரீவில்லிபுத்தூரில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என, தொண்டர்கள் கூறி வரும் நிலையில், கருணாநிதி புகழ் பாடியிருப்பது, தொண்டர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, நேற்று அதிகாலை, 3:40 மணிக்கு, விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் வந்தார். அங்கு நடந்த பூஜைகளில் கலந்து கொண்டார்.

கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:தஞ்சாவூரில் அரசை கண்டித்து நடக்கும் கூட்டத்திற்கு செல்கிறேன். அதை மக்களிடம் இருந்து மறைக்கும் வகையில், நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் குழு, தஞ்சாவூரில் ஆய்வு என்ற பெயரில், பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவர் குடும்பத்தினர், சொத்து சேர்த்து வைத்ததாக, ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் மீது, கருணாநிதி அவதூறு வழக்கு போடவில்லை; இது கருணாநிதியின் பெருந்தன்மையை காட்டுகிறது.மின்சார தட்டுப்பாடால் விசைத்தறிகள், பொருட்களின் உற்பத்தி, தொழில்கள், விவசாயம் முடங்கி உள்ளன. தற்போது குளிர் காலம் என்பதால், மின் தட்டுப்பாட்டின் தாக்கம், மக்களுக்கு தெரியவில்லை. வெயில் காலம் ஆரம்பித்தால், மக்கள் போராட ஆரம்பித்து விடுவர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் கிடைத்தால், மின்சார தட்டுப்பாடு சரி செய்யப்பட்டு விடும் என, நாடகமாடி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். dinamalar,com

கருத்துகள் இல்லை: