வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

வட இந்தியாவில் நடப்பது மின் கட்டுமானத்தின் சிதைவு

இந்த வார ஆரம்பத்தில் வட இந்தியாவில் மின் இணைப்புப் பின்னலில் சிக்கல் ஏற்பட்டு சுமார் 20 மாநிலங்களில் இரண்டு நாள்கள் மின்சாரம் முற்றிலுமாக நின்றுபோனது.
மின்சாரம் ஒரு மாநிலத்தின் பொறுப்பு. ஒவ்வொரு மாநிலமும் தனக்கான மின் தேவையை எப்படியோ உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். ஆனால் மின்சாரத்தின் அருமை கருதி மத்திய அரசு இதில் தலையிட்டு சில வேலைகளைச் செய்கிறது. தன் கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.பி.சி, என்.எல்.சி போன்ற நிறுவனங்கள்மூலம் மின் உற்பத்தி செய்கிறது. மாநிலங்களை இணைக்கும் பவர் கிரிட் எனப்படும் மின் வலைப்பின்னலை நடத்துகிறது. அணு மின்நிலையங்களை இயக்குகிறது. மாநில அரசுகள் மின் நிர்வாகத்தை மேம்படுத்த மானியம் தருகிறது.உபரி மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாது. மின்சாரம் என்பது ஓடும் பொருள். சேமக்கலங்களில் (பேட்டரி) அதிகம் சேர்த்து வைக்க முடியாத பொருள். வீடுகளில் இன்வெர்ட்டர் போன்றவற்றில் நாம் கொஞ்சமாகச் சேமித்து வைக்கிறோம். ஆனால் மாநில அளவில் இது சாத்தியமில்லாத ஒன்று. நீர் மின் நிலையங்களில் இது கொஞ்சம் சாத்தியம். உபரி மின்சாரம் இருந்தால் அதனைக்கொண்டு மோட்டார்களை இயக்கி கீழிருந்து மேலே உள்ள அணைக்கு நீரைக் கொண்டுபோய் வைக்கலாம். பின் மீண்டும் மின்சாரம் தேவைப்படும்போது அந்த நீரைக் கீழ் நோக்கிக் கொட்டவைத்து ஜெனெரேட்டர்களை இயக்கி மின்சாரத்தைப் பெறலாம். ஆனால் நீர் மின்சாரம் உற்பத்தி அளவே இன்று மிகக் குறைவானது. கரியை எரித்துப் பெறும் மின்சாரத்தைச் சாம்பலில் செலுத்தி அதனை மீண்டும் கரி ஆக்கமுடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மின் வலைப்பின்னலின்மூலம் சில மாநிலங்களை ஒன்று சேர்க்கும்போது ஒரு மாநிலத்தின் உபரி மின்சாரம் பிற மாநிலங்களுக்குச் செல்லுமாறு செய்யமுடியும். சில மாநிலங்களுக்குப் பொதுவான ஒரு மின் நிலையம் (உதாரணம்: நெய்வேலி) தயாரிக்கும் மின்சாரத்தை குறிப்பிட்ட அளவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பமுடியும்.

வட இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காரணம், ஒரு சில மாநிலங்கள், முக்கியமாக உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்றவை தாம் ஒப்புக்கொண்ட மின்சார அளவைவிட அதிகமாக மின் வலைப்பின்னலிலிருந்து உருவியதுதான். இதன் காரணமாக ஒட்டுமொத்த மின் கட்டுமானம் பாதிக்கப்பட்டு, கிரிட் செயல் இழந்தது. இதனால் அனைத்து மின் நிலையங்களும் தானாகவே வேலை செய்வதை நிறுத்திக்கொண்டன. ஏனெனில் அவை உருவாக்கும் மின்சாரத்தை கிரிட்டுக்குள் செலுத்த முடியாது. இப்படி ஒவ்வொன்றாக மின் நிலையங்கள் வேலை செய்வதை நிறுத்த, ஒட்டுமொத்த வட இந்தியா இருளில் மூழ்கியது.

நின்றுபோன அனல் மின் நிலையங்களை உடனடியாக மீண்டும் தொடங்கிவிட முடியாது. பெரும்பாலும் வெளியிலிருந்து கொஞ்சமாக மின்சாரம் உள்ளே வந்தால்தான் இவை மீண்டும் இயங்கத் தொடங்கும். ஒவ்வொன்றாக மின் நிலையங்களை இயக்கி, அவை கொஞ்சம் ஓடியபின், அவை தயாரிக்கும் மின்சாரம் சரியான ஃப்ரீக்வன்சிக்கு வந்தபின்னரே அவற்றை மீண்டும் கிரிட்டில் இணைக்க முடியும்.

ஒருமாதிரியாக இது நேற்று நடந்து, மீண்டும் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது.

இது எஞ்சினியரிங் பழுது என்பதைவிட, அரசியல் கொள்கை பழுது என்றுதான் சொல்லவேண்டும். வேண்டிய அளவு மின்சாரம் தயாரிக்கும் கட்டுமானங்களில் முதலீடு செய்யாமல் இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில அரசும் பொதுமக்களை ஏமாற்றிவந்துள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரைவிடவும் மோசமான அரசியலைத்தான் மாயாவதி, முலாயம்/அகிலேஷ் யாதவ் கோஷ்டி செய்துள்ளது. நாட்டில் பெரும் மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் யாருமே வேண்டிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. கொஞ்சம் அளவு குறைந்த மாநிலங்களில் குஜராத் உபரி மின்சாரம் தயாரிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் உபரி மின்சாரம். அவ்வளவுதான்.

நம் உண்மையான மின் தேவை நன்கு கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமார் 5 கோடி ரூபாய் முதலீடு செய்யவேண்டும். எனவே தேவையான முதலீட்டு அளவும் தெரியும். ஆனால் செயல்படுத்துவது எளிதல்ல. இடம் வேண்டும். இந்தியாவில் இடத்தை மக்களிடமிருந்து பெறுவது எளிதல்ல. அதற்காகத்தான் Ultra Mega Power Projects (UMPP), Special Purpose Vehicles (SPV) ஆகியவற்றை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் இது பெருமளவு முன்னேற்றம் காணவில்லை. எஸ்.பி.வியில் அரசே இடத்தைக் கையகப்படுத்தி, ஒரு கம்பெனியை உருவாக்கி, அதனை ஏலம் விடும். தனியார் நிறுவனங்கள் அந்த கம்பெனியை வாங்கி, அந்த இடத்தில் சட் சட்டென்று மின் நிலையங்களை அமைத்து மின்சார உற்பத்தியை மூன்று வருடத்துக்குள் ஆரம்பித்துவிடவேண்டும். ஆனால் ரிலையன்ஸ் பவர், டாடா பவர் போன்றோரே இந்த எஸ்.பி.விக்களை வாங்கி இயக்குவதில் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் 16 யு.எம்.பி.பிக்கள், ஒவ்வொன்றும் சுமார் 4,000 மெகாவாட் (மொத்தம் 64,000 மெகாவாட்) என்று மிகப் பேராசையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டங்களில் ஒன்றே ஒன்று குஜராத்தில் டாடா பவரின் ஒரு பகுதி மட்டுமே இப்போது இயங்குகிறது. மீதியில் மூன்று திட்டங்கள் ரிலையன்ஸ் பவருக்குக் கிடைத்தன. அவர்கள் இரண்டில் மட்டும் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளனர். மீதி எல்லாம் எடுப்பதற்கே ஆள் இல்லாமல் திண்டாட்டம். ரிலையன்ஸ் பவரின் பணக் கையிருப்பையும் அவர்கள் இதுவரையில் வாங்கியுள்ள கடனையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் எடுத்துக்கொண்ட வேலையே ஒழுங்காக முடியுமா என்று சந்தேகமாக உள்ளது.

மத்திய அரசு முழுமூச்சுடன் இறங்கியுள்ள இந்தத் திட்டத்தின் நிலையே இதுதான். முழுமையான நிலை பற்றி அறிந்துகொள்ள இங்கே செல்லவும்.

அணு மின்சாரம் பற்றிப் பேசவே வேண்டாம். அதற்கு எதிர்ப்பாளர்கள் எங்கு பார்த்தாலும் உள்ளனர். சூரிய ஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் அப்படியே நம்மைக் காப்பாற்றிவிடப் போவதாக இவர்கள் நினைக்கிறார்கள்.

மக்களின் மின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. மின் விசிறி இல்லாமல் தூங்க முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் ஏசி இல்லாமல் தூங்க முடியாது என்றாகிவிடும். ஃப்ரிட்ஜ் இல்லாமல் குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைக்காது. தோசை மாவு கெட்டுவிடும். தயிர் புளித்துவிடும். பாக்கெட் பால் வீணாகிவிடும். செல்பேசி, கம்ப்யூட்டர், டிவி என்று பிறவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதுதவிர, பொதுச் சேவைகள் - ரயில், டிராஃபிக் விளக்குகள் - என அனைத்துக்கும் மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் எங்கிருந்து கிடைக்கப்போகிறது?

அடுத்த கவலை, மேலே சொன்ன 64,000 மெகாவாட் யு.எம்.பி.பி வந்தால், அதற்குத் தேவையான கரி எங்கிருந்து வரப்போகிறது? அந்தக் கரியின் விலை தொடர்ந்து குறைவாகக் கிடைக்குமா? இல்லை கரி அலாட்மெண்டில் பிரதமர் 2 லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று அபத்தமாகக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்போமா?

கருத்துகள் இல்லை: