வெள்ளி, 22 ஜூலை, 2011

ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கு முதல்வரும் ஜே சொல்லியாக வேண்டும்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.  வரும் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 26-ம் தேதிதான் என்றாலும் கிட்டத்தட்ட இந்தக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி விட வேண்டும் என்று தான் தீர்ப்பு இருக்கும் என்று தெரிகிறது!
பரவாயில்லை.. இதனை அரசுத் தரப்புக்கு ஏற்ற தோல்வியாகக் கருதாமல் சமச்சீர் பாடங்களை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்று அரசு யோசிக்க வேண்டும். ஏற்கனவே உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்டுள்ள மன பாதிப்பை சரி செய்வதற்கான நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப் பட வேண்டும். விடுபட்ட இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய பாடங்களை இப்போது சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் திறந்து சமாளித்து விடலாம் என்று பள்ளி நிர்வாகிகள் யோசிக்காமல் இருப்பதற்கு வசதியாக இந்த ஆண்டு மட்டும் பாடத்திட்டத்தில் இரண்டு மாதங்களுக்குரிய பகுதிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களுக்கு இன்னமும் அதிக வெறுப்பு கல்வி மேல் வந்து விடும்!
சமச்சீர் கல்வித் திட்டத்தை வலியுறுத்தியவர்களும் இது ஏதோ தங்களுக்கு ஏற்பட்ட வெற்றி என்று சுய தம்பட்டம் அடித்து அரசின் கோபத்தை கிளறாமல் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் இரண்டு தரப்பினருமே இதில் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது!

கருத்துகள் இல்லை: