செவ்வாய், 19 ஜூலை, 2011

மக்களுக்காகத் தான் அரசாங்கம், அதிகாரிகள், நிர்வாகம் என்ற பதில் வர வேண்டும்

‘மிஸ்டர் மதுரை’…
யார் தெரியுமா? அதிரடிக்குப் புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம்!
கடந்த தேர்தலின்போதே பல பரபரப்புகளை ஏற்படுத்திய அவர், புதிய அரசு அமைந்த பிறகு மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட போதே பலரின் புருவம் உச்சந்தலை வரை வியப்பில் வளைந்தது. ‘ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு டோய்’ என்று உற்சாகக் குரல் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கரை புரண்டோடியது.
’லஞ்சம் தவிர்த்து – நெஞ்சம் நிமிர்த்து’ என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் சகாயம் அவர்களின் பணி நேர்மை அனைவருமே அறிந்தது.
ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த போது ‘தொடுவானம்’ என்ற பெயரில் மக்களுக்காக, மக்களுக்கான திட்டம் ஒன்றை செயல்படுத்த விதை விதைத்தார். மாவட்டக் கடைக்கோடியில் வசிக்கும் கிராமப்புற ஏழை மக்கள் கூட எதுவும் பிரச்னை என்றால் கிராம நிர்வாக அலுவலர் ஆரம்பித்து கலெக்டர் வரை நேரில் சென்று தவம் கிடந்து காத்திருந்து மனு எழுதிக் கொடுத்து புலம்பிக் காத்திருக்க வேண்டும் என்பது தான் காலம் காலமாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விதி! ‘இனியொரு விதி செய்வோம்’ என்று அந்த கேடுகெட்ட பழைய பஞ்சாங்கத்தை உடைத்தெரியும் எளிய திட்டம் தான் இந்த ’தொடுவானம்’.
மக்களுக்காக அரசாங்கமா, அரசாங்கத்திற்காக மக்களா என்ற கேள்வி எழுப்பினால் உண்மையான ஜனநாயகத்தில் மக்களுக்காகத் தான் அரசாங்கம், அதிகாரிகள், நிர்வாகம் என்ற பதில் வர வேண்டும். ஆனால் நம்மூரில் அப்படியா இருக்கிறது? காலணா சம்பளம் பெற்றாலும், அரசாங்க சம்பளம் பெற ஆரம்பித்து விட்டாலே மக்களை மதிக்கக் கூடாது என்கிற கொள்கை வந்து விடுகிறது. ஓரளவு விபரம் தெரிந்த நகர்ப்புற மக்களுக்கே அரசு அலுவலகங்களில் எதுவும் வேலை முடிக்கச் செல்ல வேண்டுமென்றால் அஜீரணக் கோளாறு ஆரம்பித்து விடும். படிப்பறிவற்ற ஏழை கிராமப்புற மக்களுக்கு கேட்கவா வேண்டும்?
நாட்டின் முதுகெலும்பான கிராமப்புற ஏழை விவசாயி தனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் அங்கும் இங்கும் அலைய வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் மாவட்ட ஆட்சியர் சகாயம் தனது தனிப்பட்ட முயற்சியில் செயல்படுத்த இருக்கும் திட்டம் தான் ‘தொடுவானம்’.
thoduvanam.com என்ற இணைய தளத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த அரசுத் துறைக்கு வேண்டுமானாலும் இலவசமாகவே கோரிக்கை மனு சமர்ப்பிக்கலாம். முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் 25 கிராமங்களில் தலா 5 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கணினிப் பயிற்சியும் மற்றும் மேற்படி இணைய தளத்தில் தமிழில் உள்ளிடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் உள்ள கணிப்பொறி, இணையம் மூலம் இவர்கள் மக்களின் கோரிக்கைகளை இணைய தளத்தில் உள்ளிட வேண்டும். உடனடியாக அது பதியப்பட்டு அதற்கான எண்ணும் அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலகர்கள் இணையத்திலேயே அப்டேட் செய்ய வேண்டும். கலெக்டரின் நேரடிப் பார்வையில் இணைய தளம் இருப்பதால், எந்த மாதிரியான திருவிளையாடல்களையும் இங்கே நிகழ்த்த முடியாது என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம்! கடந்த 15, 16 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் பலர் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் ஆர்வலரான ஆல்பர்ட், தகடூர் கோபி ஆகியோர் கொண்ட குழு தொடுவானம் திட்டம் சாத்தியமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். லதானந்த், செல்வ முரளி, பேராசிரியர் சரவணன், துரை மணிகண்டன், நாகமணி, விஜய், தேனி சுப்ரமணியன், சுலைமான், அருண்,  ராமசாமி உள்ளிட்ட தமிழ் இணைய நண்பர்கள் மதுரை பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள்
பயிலரங்கம் இறுதியில் அரசு அலுவலகர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களிடம் உரை நிகழ்த்திய கலெக்டர், “அரசு அலுவலகர்கள் என்றால் மக்களுக்கு பணி புரிய வேண்டும். அவர்களுக்கு பணி புரியத் தான் நாம் இருக்கிறோம். அவர்களை அலட்சியப்படுத்துவதற்கு அல்ல. தொடுவானம் நிகழ்ச்சியின் மூலம் சாதாரண மனு கொடுக்கக்கூட தனது ஒரு நாள் வேலை, கூலி ஆகியவற்றை இழந்து அலைக்கழிக்கப்படும் அவல நிலையிலிருந்து  கிராமப்புற மக்களை விடுவிக்கும் இந்த தொடுவானம் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. ஒரு மனிதன் தனக்கு வேலை ஆக வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்துக் கொண்டு அதை நம்மை நேரில் பார்க்காமலேயே செயல்படுத்திக் கொள்வதா? என்ற எண்ணமெல்லாம் உங்களுக்கு ஏற்பட வேண்டாம். அது சரியும் அல்ல. இந்தத் திட்டத்தில் எந்த அலுவலகர்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை நாங்கள் கவனிக்க இருக்கிறோம்” என்றார். கூட்டத்திற்கு வந்திருந்த சில அலுவலகர்களுக்கு இப்போதே கலவர ரேகை முகத்தில் ஓடியது தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு அதிகாரியும் இவரைப் போல மாற ஆரம்பித்தால், இந்தியா வல்லரசாக மட்டுமல்ல நல்லரசாகவே திகழும்.
வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடுவானம் திட்டம் முறைப்படி செயல்பட இருக்கிறதாம்.இந்த மாதிரியான சிறந்த திட்டங்களை மாநிலம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்த முதல்வர் முன்வர வேண்டும்

கருத்துகள் இல்லை: