ஞாயிறு, 21 மார்ச், 2010

டக்ளஸ் தேவானந்தா வழங்கிய சிறப்பு செவ்வி.

 வீரகேசரி க்கு வழங்கிய  செவ்வி.
21.03.10
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சி தனித்தே போட்டியிட வேண்டுமென்று உங்களது கட்சியின் முக்கியஸ்தர்கள்,   ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூகத்தினர் போன்றோர் ஆலோசனை தெரிவித்திருந்த நிலையிலும்        நீங்கள் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே போட்டியிடுகின்றீர்கள்.      இவ்வாறானதொரு நிலை ஏற்பட அரசுதரப்பின் அழுத்தமே காரணமெனக் கூறப்படுகிறது.

விசேடமாக,  நீங்கள் உங்கள் கட்சி ஊடாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் உங்களுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படமாட்டாதென அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறதே? இது தொடர்பில் நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில்:    எம் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகித்தார்கள் என்று சொல்ல முடியாது.
அவ்வாறு அழுத்தங்கள் வருமானால் அது குறித்து நாம் எந்த முடிவையும் எடுப்பதற்கு எமக்கு உரிமையும் உண்டு! ஆனால் எடுக்கின்ற முடிவுகள் எமது மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி விடக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.             எம்டைய நோக்கம் அரசாங்கத்துடன் பகமையை உருவாக்கிவிடக் கூடாது என்பதுதான் காரணம், கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் அர்த்தமுள்ளவை.

எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதித்த வரலாறு இல்லை.     ஆகவே இணக்க அரசியலின் மூலமே நாம் எதையும் பெற்றுவிட முடியும் என்பது எமது அனுபவம். எமது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசித்தீர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஏனைய தமிழ் தலைமைகள் பலவும் அடைத்து மூடிவிட்டன.  இன்றுவரை அரசாங்கத்துடன் பேசுவதற்கான கதவுகளை திறந்து வைத்திருப்பவர்கள் நாம்.   இதை நாம் பாதுகாக்கவே விரும்புகின்றோம்.  

இந்தத் தீர்மானம் என்பது ஈ.பி.டி.பியின் கட்சி நலன் சார்ந்த முடிவு அல்ல. எமது மக்களின் நலன் சார்ந்த விடயம்.    அதற்காக அரசாங்கம் தவறுகள் விட்டால் நாம் எமது மக்களின் நலன் சார்ந்து அதை எதிர்க்க கூடாது என்று அர்த்தமல்ல.       ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வடமாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்துவிட்டது.   நாம் எமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு அரசாங்கத்தோடு முரண்பட்டு அரசாங்கத்தை விட்டு தூரவிலகிவிட முடியாது.
இது தவிர, எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கப் போகின்ற நிலையில் தமிழ் பேசும் மக்கள் இல்லை.         இதை கடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் நாம் புரிந்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் எவருடைய ஆதரவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் பலத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெல்லப்போகின்றது என்பது உறுதியாகி விட்டது.     ஆகவே, வெளியில் நின்று பேரம் பேசி கூட்டாட்சி அமைக்கும் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை. 

ஆனால் கடந்த காலங்களில் இந்த நிலைமை இருந்தது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்த 22 ஆசனங்களும் அரசாங்கத்துடன் பேரம் பேசி கூட்டாட்சி அமைப்பதற்கான பலத்தை கொண்டிருந்தது. ஆனால், கூட்டமைப்பு அதை பயன் படுத்தியிருக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நடந்து முடிந்த அழிவு யுத்தம் தொடங்கியிருக்காது.       ஆகவே, நாம் வெளியில் நின்று பேரம் பேசாமல் உள்ளே இருந்து கொண்டே முடிந்தளவு பேரம் பேசி     கூட்டாட்சி அமைப்பதையே விரும்புகின்றோம். இதுவே சாத்தியமானதும்.

கடந்த மாநகரசபை தேர்தலில் நாம் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்ததால் எமது யாழ். மாநகர சபை நிர்வாகத்தை மிகவும் இலகுவாக கொண்டு நடத்த முடிகின்றது.     இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ, அன்றி ஜனாதிபதியோ தேவையற்ற குறுக்கீடுகளில் ஈடுபடுவதில்லை. மாறாக மாநகரசபை நிர்வாகத்தை ஊக்குவிக்கின்றார்கள்.
ஆகவே யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் நாம் போட்டியிட வேண்டிய தீர்மானம் என்பது எமது கட்சியின் விருப்பங்களுக்கு அப்பால் சமகால சூழ்நிலையும், நடை முறை யதார்த்தங்களும் உருவாக்கியிருக்கின்ற ஒரு தீர்மானமே ஆகும். நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எம்மால் முன் வைக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளை மேலும் செழுமைப்படுத்தி மேலும் அதிகமான எமது மக்களின் நியாயமான தேவைகளை, கோரிக்கைகளாக முன்வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில்தான் நாம் யாழில் மட்டும் வெற்றிலையில் போட்டியிட தீர்மானித்தோம்.

வன்னியில் எமது கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.   வரலாறு ஒருபோதும் நேரிய பாதையில் செல்வதில்லை.   வளைந்து நெளிந்து சென்றுதான் வெற்றிகளை குவித்திருக்கின்றது.     இதைப்புரிந்து கொள்ளாமால் நின்றவர்கள் தம்மையும் அழித்து மக்களையும் அழித்த வரலாறுகள்தான் எங்கும் உண்டு. ஈ.பி.டி.பியும் வளைந்து நெளிந்து செல்வது உரிய இலக்கை அடைவதற்காகவே. வன்னியில் எமது கட்சி வீணைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கு,  கிழக்கு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்துப் போட்டியிடுவதற்காக புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.    விசேடமாக உங்களுடன் இது தொடர்பில் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருப்பினும் சித்தார்த்தனின் இந்த முயற்சி கைகூடவில்லை. உங்களது கட்சி அவரின் வேண்டுகோளை ஏற்காமைக்கு என்ன காரணம்?
பதில்.. சித்தார்த்தன் அவ்வாறன முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அது வரவேற்கத்தக்கது. அவரோடு எமக்கு உறவுகள் உண்டு.  ஐக்கியம் உண்டு.

ஆனாலும் நாங்கள் ஒரு கூட்டுக்குள் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனாலும், நாம் ஐக்கியத்திற்காக எப்போதுமே கதவுகளைத் திறந்து வைத்திருப்பவர்கள். ஐக்கியத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஐக்கியப்படுங்கள் என்று கூறுகின்ற பலர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை.   ஆனாலும் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாகவே எப்போதும் இருப்போம். ஐக்கியம் என்பது தேர்தலுக்காக மட்டும் இருந்துவிடக்கூடாது. அல்லது தமது கட்சி நலன் சார்ந்ததாக மட்டும் இருந்து விடக்கூடாது. மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அந்த சிந்தனை எமது தமிழ் சமூகத்தில் அரசியலில் துளியளவும் இல்லை.

கடந்த காலங்களில் பல ஐக்கியங்களும் கூட்டுக்களும் இருந்தன.  என்ன நடந்தது?... 1977 இல் ஐக்கியப்பட்டு தமிழர் விடுதலை கூட்டணி அமைத்தார்கள். 18 ஆசனங்களை கைப்பற்றி என்ன செய்தார்கள்? தமிழீழ ஆணை கேட்டு நாடாளுமன்றம் போனவர்கள் எமது மக்களை உணர்ச்சி பொங்க பேசி உசுப்பிவிட்டு. இளைஞர் யுவதிகளை பலிக்களத்திற்கு அனுப்பிவிட்டு தமிழ் நாட்டில் தனி வீடு எடுத்து குடி புகுந்து கொண்டார்கள். அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களோடு நான் பழகிய நாட்களில் இது குறித்து நான் அவரோடு நேரடியாகவே கதைத்திருக்கின்றேன். ஆனாலும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.   அவர் இன்று இருந்திருந்தால் மாற்று வழிகளில் சிந்தித்திருப்பார்.
அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைத்து 22 ஆசனங்களை தவறான வழியிலாவது பெற்றிருந்தார்கள். எதை சாதித்தார்கள்?... மறுபடியும் உணர்ச்சி பொங்க பேசி, உணர்ச்சி ஏற்றிவிட்டு. அழிவு யுத்தத்திற்கு நியாயம் சொல்லி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் விட்டார்கள். அவர்கள் பெற்றிருந்த பாராளுமன்ற பலத்தை சரிவரப்பயன் படுத்தியிருக்கவில்லை.   இன்று அந்த ஐக்கியம் உடைந்து மூன்று குழுக்களாக குழுச்சண்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். தாம் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டுக்குள் போட்டியிட்டால் மட்டுமே தேர்தலில் வெல்ல முடியும் என்று சிலர் சிந்திக்கிறார்கள். எங்க ளுக்கு அந்த சிந்தனை இல்லை. அந்த தேவையும் இல்லை.

நாம் வன்னி மாவட்டத்தில் புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளோடு இணைந்து போட்டியிட அழைப்பு விடுத்திருந்தோம். ஆனாலும் அவர்கள் அதை ஏற்க வில்லை. இது அவர்களது விருப்பம். ஆனாலும் நாம் இறுக்கமான உறவுகளை சில கட்சிகளோடு பேணி பாதுகாத்து வருகின்றோம். அவர்களோடு எதிர்காலத்தில் ஐக்கியப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு.
தேசியம்,  தன்னாட்சி,     சுயநிர்ணய உரிமை இவைகளே எமக்கு தீர்வு என்று நடை முறைக்கு சாத்தியமற்ற வழியில் சிந்திப்பவர்களோடு ஐக்கியப்பட்டு என்ன பயன்?... நாம் இவைகளுக்காக இரத்தம் சிந்தியவர்கள். கதிர்காமத்திற்கு யாத்திரை போவதென்றால் இடையில் பல இடங்களில் தங்கி இளைப்பாறித்தான் செல்ல முடியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து தொடங்குவதை யார் ஆதரிக்கிறார்களோ நாம் அவர்களோடு ஐக்கியத்திற்கு தயார்.   

அல்லது இதை விடவும் நல்ல தீர்வாகவும்,   அதே வேளை நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் யாராவது தீர்வு வைத்திருந்தால் நாம் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தொடங்குவதை கைவிட்டு அவர்களோடு ஐக்கியப்படவும் நாம் தயார். ஐக்கியம் என்பது பல்வேறு தரப்பினரதும் பன்முகச்சிந்தனைகளை விழுங்கிவிடுவதாக இருந்து விடக்கூடாது.
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் சில கோரிக்கைகளை நீங்கள் முன்வைத்திருந்தீர்கள். அவற்றில் ஏதேனும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா?
பதில் ஆம்!... நாம் முன்வைத்த சில கோரிக்கைகள் உடனடியாகவும், சில கட்டம் கட்டமாகவும், சில அதற்குரிய சூழல் உருவாகும் போதும் நிறைவேற்ற முடிந்தவை. குறிப்பாக ஏ ஒன்பது வீதி முழுமையாக திறக்கப்பட்டுவிட்டது. மீள் குடியேற்றம் தொடர்ந்தபடி இருக்கின்றது. கைதிகள் விடுதலை குறித்து ஒரு பகுதியினர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்,  ஏனையவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

யுத்தம் நடந்த பிரதேசங்களில் அபிவிருத்திக்கு முன்னிடம் என்ற வகையில் ஐனாதிபதி நிதியில் இருந்து வடக்கு மாகாணத்தில்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.         குறிப்பாக 13 வது திருத்தச்சட்டத்தை ஆரம்பிப்பது என்ற அடிப்படையில் அடுத்து நடக்கப்போவது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் என்பதையும் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு இவைகள் அனைத்தும் துரிதமாக்கப்படுவதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுவோம். எனக்கு இதில் நம்பிக்கை இருக்கின்றது.
கேள்வி: வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் அரசு வடமாகாணத்தில் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நீங்கள் திருப்திப்படுகிறீர்களா?   அந்தப் பணிகள் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறதே இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்.. நான் பொதுவாகவே எதிலும் திருப்தி அடைவதில்லை. ஆனாலும் எது நடக்கவேண்டுமோ அது நான்றாகவே நடந்து கொண்டிருக்கின்றது.   எதிர்வரும் தேர்தலில் அதிகமான ஆசனங்களை நாம் யாழில் கைப்பற்றுவோம். வன்னியிலும் வெற்றிபெறுவோம். அதிலிருந்து இன்னும் இவைகள் துரிதமடைவதற்கான அரசியல் பலம் எமக்கு கிடைக்கும்.   அதை எமது மக்கள் வழங்குவார்கள்.

வடக்கின் மாகாணசபை நிர்வாகம் உருவாக்கப்பட்ட பின்னர் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் இலகுவாகவும்,   துரிதமாகவும் நடைபெறும்.
கேள்வி: யுத்தம் முடிந்து விட்டது. புலிகளின் அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் வடபகுதியில் இன்னும் பாதுகாப்பு உயர் வலயங்கள் உள்ளனவே?     இவற்றினை அகற்றுவது குறித்து நீங்கள் சம்பந்தப்பட்டோருடன் கலந்துரையாடியுள்ளீர்களா? இவற்றினை அகற்றிவதில் ஏதாவது தரப்பினர் தயக்கம் காட்டுகின்றனரா?
பதில்: பாதுகாப்பு வலயங்களை நோக்கி நானே கால்நடையாக நடந்து மக்களை அழைத்து சென்றிருக்கின்றேன். எந்த பகுதிகளில் நீங்கள் இனி குடியேறலாம் என்று நான் குறிப்பிட்டு மக்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கின்றார்கள். உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து பல பகுதிகள் நீக்கப்பட்டு விட்டன.       ஆனாலும் நாம் தொடர்ந்தும் இது குறித்து பேசி வருகின்றோம்.
கேள்வி: தற்போது தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர். இது வடக்கின் கலாசார சீரழிவை ஏற்படுத்தலாமெனக் கூறப்படுகிறது.    இது குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்: இது தவறான தமிழ் தேசியம் பேசும் குழுக்கள் உச்சரிக்கும் தேர்தல்கால பிரச்சாரம்.

இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பில் குறிப்பாக தென்னிலங்கையிலும், வெளிநாடுகளிலும்தான் தங்களது அதிகமான வாழ் நாட்களை கழிக்கின்றார்கள். இன்று தவறான தமிழ் தேசியம் பேசும் குழுக்களில் இருப்பவர்கள் புலிகளால் விரட்டப்பட்டு கூட்டம் கூட்டமாக கொழும்பில் சென்று குடியேறினார்கள்.   கொழும்பில் உள்ள கபித்தாவத்தை கோவிலில் படுத்து உறங்கினார்கள். அப்போது எந்தவொரு சிங்கள குடிமகனும் தென்னிலங்கை கலாசாரம் சீரழிகின்றது என்று சொன்னார்களா?...

90 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து தப்பித்து ஓடி வந்த தமிழ் குடும்பங்களை இளைஞர் யுவதிகளை ஈ.பி.டி.பி யினராகிய நாம் 4 முகாம்கள் அமைத்து பாராமரித்து வந்தோம். அப்போது கொழும்பு கலாசாரம் சீரழிகின்றது என்று யாராவது சொன்னார்களா?...

கொழும்பில் எத்தனை இந்து ஆலயங்கள் அமைத்து எமது தமிழர்கள் செயற்பட்டு வருகிறார்கள். அதை எந்த ஒரு சிங்கள குடிமகனும் கொச்சைப்படுத்தவில்லை.  சாதாரண அப்பாவி சிங்கள மக்கள் யாழுக்கு வந்து போவது அவர்களது விருப்பம் என்றால் இதை நாம் கலாச்சார சீரழிவு என்று எப்படி கூற முடியம்?...

பொருளாதாரம், மனிதநேயம் மக்களை இணைக்கிறது. அரசியல் மக்களை பிரிக்கின்றது. அப்பாவி சிங்கள மக்கள் யுத்தத்தால் சிதைந்து போன எங்கள் வாழ்விடங்களை வந்து பார்க்கட்டும். எமது மக்களோடு கை குலுக்கட்டும். அப்போதுதான் தமிழர்கள் தங்களது வரலாற்று வாழ்விடங்களில் அபிவிருத்தியும் அரசியலுமையும் பெற்றவர்களாக வாழும் சூழல் உருவாகும்.
கேள்வி: அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடியிருந்தீர்கள். அத்துடன் சில விடயங்கள் தொடர்பில் இந்திய அரசின் உதவியையும் நீங்கள் கேட்டிருந்தீர்கள். எங்களது மக்களது பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடம் கேட்டுத்தான் எதனையும் பெறவேண்டுமா?
பதில்: தங்களிடம் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்று இந்தியா எவருக்கும் சொல்லவில்லை. ஆனாலும் நான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் உள்ள சோனியா காந்தி, மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அனைவருடனும்        தமிழ் மக்களின் அரசியலுமை குறித்து பல தடைவ பேசியிருக்கினறேன்.  13ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவுடனும் சந்பந்தப்பட்டது. அதை நடைறைப்படுத்த வேண்டும் என்றே அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அந்த அக்கறை இந்தியாவிற்கு உண்டு.   ஈ.பி.டி.பி.யினராகிய நாம் முன்னெடுக்கும் இந்த தீர்வையே இந்தியாவும் ஏற்றிருக்கின்றது. ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவும் அதையே தெரிவித்திருக்கிறார். ஆகவே இது குறித்து அவர்களோடு பேசுவதில் என்ன தவறு?

கருத்துகள் இல்லை: