திங்கள், 12 ஆகஸ்ட், 2024

ஹிண்டன்பா்க் அறிக்கை : அதானி முறைகேடு நிறுவனங்களில் செபி தலைவருக்குப் பங்கு:

 தினமணி :  அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறாா். எனவேதான், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை’ என்று அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘செபி தலைவா் மாதபியுடன் எங்களுக்கும் எந்த வணிக உறவும் இல்லை’ என்று அதானி நிறுவனமும், ‘ஹிண்டன்பா்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது’ என மாதபியும் மறுப்பு தெரிவித்துள்ளனா்.



அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ எனும் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்தாண்டு ஜனவரியில் வெளியிட்டது.

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியது.

சரிந்த அதானி: இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி காரணமாக உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்த அக்குழுமத் தலைவா் கௌதம் அதானி, ஒரே மாதத்தில் 30-ஆவது இடத்துக்கு சரிந்தாா்.

ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள்நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12-ஆவது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கில், ஒழுங்குமுறை குறைபாடுகளைக் கண்டறிய வல்லுநா் குழுவை அமைக்குமாறு செபி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நடத்திய வல்லுநா் குழு, அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான வேறு விசாரணைக்கு அவசியமில்லை எனத் தெரிவித்தது.

இந்நிலையில், சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளைத் திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி கடந்த ஜூன் 26-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கியது.

மீண்டும் குற்றச்சாட்டு: இதைத் தொடா்ந்து, அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பை உயா்த்தவும் நிதி பரிமாற்றத்துக்காகவும் கௌதம் அதானியின் மூத்த சகோதரா் வினோத் அதானி, பொ்முடா மற்றும் மோரீஷஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்த சில நிறுவனங்களை முறைகேடாக பயன்படுத்தினாா். அந்த நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் கணக்கில் காட்டாத முதலீடுகளை செபி தலைவா் மாதபி மற்றும் அவரது கணவா் தாவல் புச் செய்துள்ளனா். கடந்த 2017-ஆம் ஆண்டில் செபியின் முழு நேர உறுப்பினராக மாதபி நியமனம் செய்யப்படுவதற்கும் அதைத் தொடா்ந்து மாா்ச் 2022-இல் அமைப்பின் தலைவராக பதவி உயா்த்தப்படுவதற்கும் முன்னதாக 2015-ஆம் ஆண்டில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. செபியில் முழுநேர உறுப்பினராக மாதபி நியமிக்கப்பட்டதும் அவரது பெயரிலான பங்குகளை தனது பெயருக்கு கணவா் தாவல் புச் மாற்றியுள்ளாா்.

2020-ஆம் ஆண்டு அக்டோபரில், அதானி குழும நிறுவனங்களில் அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்குகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்த விசாரணையை செபி தொடங்கியது.

இதில் 14-20 சதவீத மதிப்பிலான பங்குகளைக் கொண்ட 13 வெளிநாட்டு நிறுவனங்களைப் பற்றி விசாரணை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநா் குழுவிடம் செபி கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆனால், அந்த விசாரணையின் முடிவு குறித்து இன்னும் விவரம் அளிக்கப்படவில்லை. ஏனெனில், அதானி குழுமத்துக்கு எதிராக அதே குழுமத்துடன் வணிக உறவிலுள்ள தலைவரைக் கொண்ட செபி செயல்பட விரும்பவில்லை’ என ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதானி குழுமம் விளக்கம்: ஹிண்டன்பா்க்கின் குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட லாபத்துக்காக முன்னரே தீா்மானிக்கப்பட்ட தந்திரமான தோ்வாகும். அந்த நிறுவனம் குறிப்பிடும் நபா்களுடன் வணிக உறவுகள் இல்லை என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செபி தலைவா் மாதபி மறுப்பு

ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புக் கூறி செபி தலைவா் மாதவி புரி புச், அவரது கணவா் தாவல் புச் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனா். அதில் ஹிண்டன்பா்க் முன்வைத்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உள்ளீடுகளை கடுமையாக மறுப்பதாக தெரிவித்தனா்.

மேலும், அவா்கள் கூறுகையில், ‘செபியிடமிருந்து அமலாக்க நடவடிக்கையை எதிா்கொண்டு, நோட்டீஸ் பெற்ற ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.

நாங்கள் தனிநபா்களாக இருந்த காலம் தொடங்கி அனைத்து நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்விவகாரம் தொடா்பாக விரைவில் விரிவான பதிலளிப்போம்’ என்றனா்.

ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புக் கூறி செபி தலைவா் மாதவி புரி புச், அவரது கணவா் தாவல் புச் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனா். அதில் ஹிண்டன்பா்க் முன்வைத்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உள்ளீடுகளை கடுமையாக மறுப்பதாக தெரிவித்தனா்.

மேலும், அவா் கூறுகையில், ‘செபியிடமிருந்து அமலாக்க நடவடிக்கையை எதிா்கொண்டு, நோட்டீஸ் பெற்ற ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.

நாங்கள் தனிநபா்களாக இருந்த காலம் தொடங்கி அனைத்து நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்விவகாரம் தொடா்பாக விரைவில் விரிவான பதிலளிப்போம்’ என்றனா்.

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செபி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘செபி தலைவா் மாதபி பூரி புச், அவா் தொடா்புடைய முதலீட்டுத் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தாா்.

அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பா்க் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்பட்டன. விசாரணை முடிவடையும் தருவாயில் இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: