வியாழன், 21 மார்ச், 2024

பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர் - உச்சநீதிமன்றத்தின் குட்டு..

minnambalam.com - Selvam :  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு இன்று இரவு  7.30 மணி முதல் 8 மணிக்குள்  பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
கடந்த 13ஆம் தேதி அனுப்பிய கடிதத்துக்கு 17ஆம் தேதி பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இன்று ஒரு நாள் தான் கெடு. அதற்குள் சாதகமான முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆளுநருக்கு எதிராக கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என  எச்சரித்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் இன்று (மார்ச் 21) மதியம்  சட்ட நிபுணர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்.

இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் ஸ்ரீஹரி கோட்டா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக ஆலோசனை செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு 7.30 முதல் 8 மணிக்குள் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வணங்காமுடி

கருத்துகள் இல்லை: