செவ்வாய், 19 மார்ச், 2024

மோடியுடன் மேடையேறும் ராமதாஸ், அன்புமணி-தைலாபுரத்தில் நடந்தது என்ன?

மின்னம்பலம் Selvam மார்ச் 18 ஆம் தேதி மாலை தைலாபுரம் தோட்ட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ‘பாஜகவோடு பாமக கூட்டணி அமைக்கும். நாளை மோடியுடன் அன்புமணி சேலத்தில் மேடையேற வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்த வீடியோ பைட்
“நேற்று (மார்ச்17) மாலை 4.15 மணி முதல் 6.15 மணி வரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்துக்கு சென்ற பாமக எம்.எல்.ஏ. அருள், டாக்டர் ராமதாஸ் சொன்ன செய்திகளை எடப்பாடியிடம் தெரிவித்தார். அதன் பின் அருளின் ஐ போன் மூலமாகவே எடப்பாடி டாக்டர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் பேசினார்.
அப்போது, ‘நானே தைலாபுரம் வர்றேன்’ என்று எடப்பாடி சொல்ல, ‘நாளைக்கு (மார்ச் 18) கூட்டம் வச்சிருக்கோம். அதுல சொல்லி முறைப்படி முடிவெடுத்துட்டு நாங்க வர்றோம்’ என்று பதிலளித்தார் அன்புமணி. இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் எடப்பாடி.

எடப்பாடியை டாக்டர் ராமதாஸின் தூதர் அருள் எம்,.எல்.ஏ. சந்தித்ததும், இதைத் தொடர்ந்து அதிமுக-பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதும் ஞாயிற்றுக் கிழமை மாலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

18 ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வரும் நிலையில், பாஜகவுக்கு கூட்டணி ரீதியாக இது ஒரு முக்கியமான இழப்பாகவே கருதப்பட்டது. நேற்று மாலை இது தொடர்பாக பாஜக முக்கிய புள்ளிகளின் அவசர ஆலோசனை நடைபெற்றது.

‘இப்போதைய நிலையில் பாமக எடப்பாடியின் பக்கம் போய்விட்டால், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகும். ஏற்கனவே தமாகா, ஐஜேகே போன்ற சிறு சிறு கட்சிகள் தான் நமது கூட்டணியில் இருக்கின்றன. திமுக, அதிமுக அல்லாத கட்சிகளில் ஓரளவு பெரிய கட்சி என்றால் அது பாமகதான். அந்த நிலையில் பாமகவை நாம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர்க்க வேண்டும்’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பாமக தரப்பில் பத்து மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவைத் தொகுதி, மத்திய அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி கேட்கப்பட்டது. ஆனால். இதற்கு பாஜக சரியான ரெஸ்பான்ஸ் தரவில்லை.

ஆனால், நேற்று எடப்பாடியுடன் பாமக பேச்சுகளை தொடங்கிவிட்ட நிலையில்… அண்ணாமலையும், ஏற்கனவே அன்புமணியுடன் பேசிய டெல்லி பாஜக புள்ளிகளும் நேற்று மாலை முதலே அன்புமணியை மீண்டும் தொடர்புகொள்ளத் தொடங்கினர்.

பாமக சார்பில் கேட்கப்பட்ட ‘10 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தருகிறோம். மோடி கேபினட்டில் அமைச்சர் பதவியும் தருகிறோம் என்றெல்லாம் வாக்குறுதியளித்தனர். மேலும், தேர்தல் செலவுகள் தொடர்பான சில விவகாரங்களிலும் சாதகமான பதிலை பாஜக புள்ளிகள் கூறியிருக்கிறார்கள்.

7 பேர் மற்றும் நபர்கள் புன்னகைகின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

இந்த நிலையில்தான் மார்ச் 18 ஆம் தேதி மாலை உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் டாக்டர் ராமதாஸ்.

அன்புமணி, ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ஏ.கே.மூர்த்தி, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட உயர் மட்ட குழு நிர்வாகக் குழு இன்று மாலை 4.20 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் இல்லத்தில் தொடங்கியது. இந்த கூட்டம்,  5.40 க்கு முடிந்தது.

அதில் பாஜக நமது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அதனால் பாஜக பக்கம் போகலாம் என்ற தகவலை உயர் நிலை நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இந்தக் கூட்டம் முடிந்த ஐந்து நிமிடங்களில், 5.45 மணிக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். 2 கூட்டங்களிலும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் பேசினார்கள். குரல்தான் வெவ்வேறாக இருந்தது. ஆனால் கருத்து ஒன்றுதான்.

மாசெக்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ‘கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. எத்தனை காலம்தான் மற்றவர்கள் பின்னால் போக முடியும்? நமக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது. நாம் தமிழ்நாட்டை ஆள வேண்டும். இப்படி இருக்கும்போது நாம் எப்படி எடப்பாடிக்கு ஓட்டு கேட்க முடியும்? நாம் பிரதமர் வேட்பாளருக்காக ஓட்டு கேட்கலாம். ஆனால், இன்னொரு கட்சியை சேர்ந்த முதல்வர் வேட்பாளருக்காக இப்போதே நாம் ஏன் ஓட்டு கேட்க வேண்டும்?

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இப்போது பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் பிரதமர் யார் என்று சொல்லி கேட்கலாம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் யார் பிரதமர் என்று சொல்லி ஓட்டு கேட்பது? இப்போது நாம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக பின்னால் போகிறோம். 2026 இல் சட்டமன்றத் தேர்தலுக்காக நம் பின்னால் வருவார்கள். எனவே, இந்த முடிவு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக.

தமிழ்நாட்டில் அதிமுக தேய்கிற கட்சி. பாஜக வளர்கிற கட்சி. எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு சேர்ந்து நாம் கூட்டணி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த தொலை நோக்கு சிந்தனையோடு இப்போது பாஜக அணியில் இணைவோம்’ என்று பேசியிருக்கிறார் அன்புமணி.

பாஜக கூட்டணி  குறித்த தகவல்களை மார்ச் 19 ஆம் தேதி காலை டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் விளக்குகிறார். அதன் பின் சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸும், அன்புமணியும் கலந்துகொள்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: