புதன், 18 அக்டோபர், 2023

ராமஜெயம் கொலை வழக்கு: பாமக பிரமுகர்கள் 2 பேரிடம் திடீர் விசாரணை! அமைச்சர் நேரு தம்பி ..

tamil.oneindia.com -  Mathivanan Maran :  திருச்சி: தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கில் புதிய திருப்பமாக பாமக பிரமுகர்கள் என கூறப்படும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் திடீரென விசாரணை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த திமுக தலைவரும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். திருச்சி திமுகவின் நேருவின் 'நிழலாக' திமுகவின் 'செயல்' முகமாக இருந்து வந்தவர்.
கடந்த 2012-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற நிலையில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார் ராமஜெயம்.
பின்னர் ராமஜெயத்தின் உடல் கொடூரமாக தாக்கப்பட்டு முள்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் காவிரி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.



11 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை ஶ்ரீரங்கம் போலீசார் முதலில் நடத்தினர். பின்னர் சிபிசிஐடி, சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டது. ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்னமும் ராமஜெயம் கொலை வழக்கில் சிறு முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கின் கொலையாளிகள் யார் என்பதே தெரியாத மர்மமாக இருந்து வருகிறது.

12 ரவுடிகளிடம் விசாரணை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 ரவுடிகளை குறிவைத்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்டவை நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் நடத்தப்பட்டது. இருந்த போதும் ராமஜெயம் கொலை வழக்கின் திசைவழி போக்கு தெரியாமல் பெரும் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ராமஜெயம் கொலை வழக்கு.. முக்கிய துப்பாக ராமஜெயம் கொலை வழக்கு.. முக்கிய துப்பாக "வெர்ஷா வேன்".. கோவையில் சிபிசிஐடி கிடுக்குபிடி விசாரணை!

எஸ்பி இட மாற்றம்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த எஸ்பி ஜெயக்குமாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் திருவாரூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாமக பிரமுகர்களிடம் திடீர் விசாரணை: இந்த பின்னணியில் இன்று திடீரென பாமக பிரமுகர்கள் எனக் கூறப்படும் பிரபு, உமாநாத் இருவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி போலீஸ் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ராமஜெயம் மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டார். ராமஜெயத்தை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட காரை பாமக பிரமுகர்களாக கூறப்படும் பிரபு, உமாநாத் ஆகியோரும் பயன்படுத்தியதாகவும் அதனாலேயே சந்தேக வளையத்துக்குள் கொண்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: