திங்கள், 25 செப்டம்பர், 2023

பாக்சிங்... ஒரே நாளில் சீமான் தோத்துட்டாரு’: வீரலட்சுமி அறிவிப்பு!

 மின்னம்பலம் -christopher  : பாக்சிங் சண்டை குறித்து சீமான் கூறிய பதிலால் அவர் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், இது தனது தமிழர் முன்னேற்ற படைக்கு கிடைத்த வெற்றி என்றும் வீரலட்சுமி இன்று (செப்டம்பர் 24) அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரால் பரபரப்பு நிலவியது. எனினும் அவர் கடந்த வாரம் தனது புகாரை வாபஸ் பெற்று பெங்களூர் சென்று விட்டார்.
சீமான் – வீரலட்சுமி மோதல்!
ஆனால் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்த வீரலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையே மோதல் வெடித்து ‘இதுக்கு ஒரு எண்டே இல்லையா?’ என்ற ரீதியில் நீண்டு வருகிறது.


விஜயலட்சுமி விவகாரத்திற்கு பிறகு, வீரலட்சுமியின் கணவர் கணேசன், ”அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா?” என்று சீமானிடம் கேட்கும் ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வந்தது.
இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர் (கணேசன்) எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று வீடியோ வெளியிட்ட வீரலட்சுமி, பாக்சிங் செய்வதற்கும் இடம் தயாராக இருப்பதாகவும், சீமானுக்கும், தனது கணவருக்கும் அடுத்த ஆண்டு காணும் பொங்கல் அன்று பாக்சிங் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

இப்படி தொடர் வார்த்தை யுத்தமாக நீண்டு கொண்டிருந்த நிலையில் வீரலட்சுமியின் அறிவிப்பு தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

 பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா?

அதற்கு அவர், “வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு போ என்று சொல்கிறார்கள். இருந்தாலும் பெரியவர்களாகிய நீங்க கேட்பதால் சொல்கிறேன். நான் புலி.. பூனை கூப்பிட்டு புலி சண்டையிட போகுமா? இல்லை பேசாமல் செல்லுமா.. அதுமட்டும் சொல்லுங்க..

சிவபெருமான் எழுதி கொடுத்த பாட்டை நக்கீரர் குறை சொல்லிருவாரு.. தருமி கேட்பார்.. ’பாட்டு எழுதி புகழ் பெறும் புலவர்களும் உண்டு.. பாட்டை குற்றம், குறை கண்டு புகழ் பெறும் புலவர்களும் உண்டு’ என்று…

அதுமாதிரி என்னைய எதிர்த்து பேசுவதால் உங்களுக்கு ஒரு அடையாளம் வருது. என்னை எதிர்க்க வேண்டிய தேவை, விமர்சித்து பேச வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கு. எனக்கு உங்களை எதிர்த்து பேசவேண்டிய, விமர்சித்து பேச வேண்டிய தேவை இருக்கா?

என்னை எதிர்க்கிறவங்க எல்லாம் எனக்கு எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் எதிரி.. அவர் தான் என் எதிரி.. இனிமேலா பிறந்து எனக்கு எதிரி வரப்போகிறான்?

நான் தீர்மானிச்சுட்டேன். என் எதிரி யார்? என் இலக்கு எது? என் பயணம் எவ்வளவு தூரம்? இதெல்லாம் வெட்டிப்பேச்சு.. என்னோடு அவர்களை ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கும் சிறுமை, எனக்கும் சிறுமை. நான் செய்யும் வேலைக்கும் சிறுமை.. அதை விட்டுவிடுங்கள்” இவ்வாறு சீமான் கூறியிருந்தார்.

தமிழர் முன்னேற்ற படைக்கு கிடைத்த வெற்றி!

இதோடு முடிந்துவிடும் என்று பார்த்தால், சீமானின் பேச்சு குறித்து வீரலட்சுமி இன்று மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”சீமான் என் கணவரோடு பாக்ஸிங் செய்வதற்கான நேரத்தை எங்களை குறிக்க சொல்லி இருந்தாரு. அதன்படி இடத்தையும் நேரத்தையும் வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் ‘நான் பாக்சிங் செய்ய முடியாது’ என்று தோல்வியை சீமான் இன்று ஒத்துக்கொண்டார்.

இதன்மூலமாக தன்னுடைய சொல்லுக்கும் செயலுக்கு வித்தியாசம் இருக்குன்னு அவரே வெளிப்படுத்திட்டாரு. இது தமிழர் முன்னேற்ற படைக்கும் கிடைத்த வெற்றியாக நான் இதை அறிவிச்சிக்குறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: