புதன், 27 செப்டம்பர், 2023

தமிழக அரசு மானியத்துடன் கடன் தருகிறது.. ரூ.3.75 லட்சத்தை கட்டத் தேவையில்லை

tamil.oneindia.com  - Velmurugan P : திருவாரூர்: நீங்கள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞராக இருந்தால் உங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், நீங்கள் தொழில் துவங்கவும் தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கப்படுகிறது.
15 இலட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமானியம் ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன் பெற முடியும்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
"குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008ன் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

18 - 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 55 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் 5லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிக பட்சமாகரூ.15 இலட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிக பட்ச மானியம் ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன் பெறலாம்.

வீட்டு கடன்.. வங்கியில் உங்களுக்கு லோன் இருக்கா? வீட்டுக்கே வர்றாங்களாமே வீட்டு கடன்.. வங்கியில் உங்களுக்கு லோன் இருக்கா? வீட்டுக்கே வர்றாங்களாமே

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர் 610004 (தொலைபேசி எண்: 04366-224402) என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்"இ இவ்வாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா மாவட்டத்திற்குமே பொருந்தும். அந்தந்த மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்த கடன் உதவி திட்டங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டுப்பெறலாம். தகுதி உடையவர்கள் கடன் பெற்று பயன் பெறலாம்.

கருத்துகள் இல்லை: