வியாழன், 20 ஏப்ரல், 2023

அவதூறு வழக்கு | ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

.hindutamil : சூரத்: தூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது.

இனி, ராகுல்காந்தி, இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்திவைக்க மனுவும் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்ததுடன் ஜாமீன் வழங்கினார். ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: