செவ்வாய், 18 ஏப்ரல், 2023

அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

 minnambalam.com  - monisha :  சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) மானியக் கோரிக்கையின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.
2023-24 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கை விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், துறை சார்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


அவை, “25 கோடியே 70 லட்சம் செலவில் 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வாங்கப்படும்.
சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம், உள் புகார் குழுக்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் 50 லட்சம் ரூபாய் செலவில் இணையத்தள முகப்பு மற்றும் கைப்பேசி செயலி உருவாக்கப்படும்.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர் ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மறுசீரமைக்கப்படும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணித்து நிகழ் நேரப் பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18,723 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 17 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவினத்தில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.

குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு 14 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும். முன்னேற விளையும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தை மையங்களுக்கு கற்றல் திறனை ஊக்கப்படுத்துவதற்கு எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டிகள் ஒரு மையத்திற்கு 25 ரூபாய் செலவில் மொத்தமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் முன்பருவ கல்வி பயிலும் 9,088 குழந்தைகளுக்கு ஸ்வட்டர், தொப்பி, காலுறை வழங்குவதோடு 608 மையங்களுக்குத் தரை விரிப்பான்கள் 80 லட்சம் ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.

குழந்தைகள் மையங்களில் சமையலுக்குத் தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து குழந்தைகள் மையங்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படும். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகள் சேமித்தல் மற்றும் இணையத்தளம் நிறுவுதல், நிகழ் நேரக் கைப்பேசி மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு 1 கோடி ரூபாய் செலவினத்தில் மேற்கொள்ளப்படும். குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குநர் வாயிலாக மனரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்த உரிய பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் 1 கோடி ரூபாய் செலவினத்தில் மேற்கொள்ளப்படும்.

பாலியல் குற்றங்கள் அல்லாது பிற துன்பங்கள் மற்றும் சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க 50 லட்சம் ரூபாய்க்கு நிதி தொகுப்பு வழங்கப்படும். சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 34 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் திறன் பலகைகள் 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.

திருச்சி, கோவை மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்ட தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சென்னை ராயபுரத்தில் உள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் தலா 7 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்” என்று அறிவித்தார்.

மோனிஷா

கருத்துகள் இல்லை: