புதன், 29 மார்ச், 2023

அம்பாசமுத்திரம் ஏ எஸ் பி பல் புடிங்கிய விவகாரம்.. மனித உரிமை மீறல்களில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது:

 Kalaignar Seithigal :  தமிழ்நாடு அம்பாசமுத்திரம் விவகாரம்.. மனித உரிமை மீறல்களில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது: முதல்வர் உறுதி!
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் விவகாரம்.. மனித உரிமை மீறல்களில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது: முதல்வர் உறுதி!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (29-3-2023) சட்டம்-ஒழுங்கு தொடர்பான கவன ஈர்ப்புக்கு, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உரை:-
பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே அரசினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, ஜவாஹிருல்லா, ஜே.ஜி. பிரின்ஸ் , அருள், முகம்மது ஷாநவாஸ், நாகைமாலி, வேல்முருகன் உள்ளிட்ட பலர் இதுகுறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் என்ற வியாசை இளங்கோ நேற்று முன்தினம் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில், செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கொலையுண்ட இளங்கோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்துத் தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரியவந்தது.

காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன், அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி.

மேலும், கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப் பொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்த புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட இங்கே உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சார்-ஆட்சியர் / உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன் என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முழுமையான விசாரணை அறிக்கை வரப்பெற்றவுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக உறுதியளிக்கிறேன். இவையெல்லாமே சம்பவம் நடைபெற்ற உடனேயே இந்த அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் ஆகும்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரௌடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ல், கடந்த அதிமுக ஆட்சியில், 1,670 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. தி.மு.க. ஆட்சியில், அதாவது, 2022-ல் அது 1,596 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் இந்த ஆட்சியில்தான் குறைக்கப்பட்டுள்ளன; அப்படிச் சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது.

நமது ஆட்சியைப் பொறுத்தவரை, காவல் துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில் எந்தவிதமான பாரபட்சமோ, அரசியலோ எதுவும் பார்க்காமல், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து, என் விளக்கத்தை நிறைவு செய்கிறேன்" என தெரிவித்தள்ளார்.

கருத்துகள் இல்லை: