வியாழன், 30 மார்ச், 2023

அம்பாசமுத்திரம் ஏ எஸ் பி பல்பீர்சிங் - சாத்தான்குளம் மாதிரி. எங்களையும் கொலை செய்துவிட்டால்? பாதிக்கப்பட்டோர் பேட்டி

nakkeeran :  “மருந்து குடித்து சாக வேண்டியது தான்” - பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டோர் பேட்டி
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, “குற்றச்செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது.


அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்டோர், “போராடிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நியாயமும் கிடைக்கவில்லை. சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்கவில்லை என்றால் மருந்து குடித்து சாக வேண்டியது தான். நான் வந்து இரண்டு மணிநேரம் ஆகிறது. இன்னும் என்னை விசாரிக்கவில்லை. அவர்கள் எங்களிடம் விசாரித்தால் தான் எங்களால் சொல்ல முடியும். அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை.

கண்டீசன் பெயிலில் கையெழுத்து போட்டு வெளியில் வரும் வரை எங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எங்களை அடித்ததோடு இல்லாமல் ஏன் எதற்கு என்று கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள். நாளை எங்களை உள்ளே பிடித்து அடித்து, இவர்கள் ஸ்டேசனுக்கே வரவில்லை என்று எங்களை கொலை செய்துவிட்டால் எங்களால் என்ன செய்ய முடியும். எங்கள் ஆறு பேருக்கும் சாத்தான்குளம் விவகாரம் மாதிரிதான் ஆகப்போகிறது என நினைக்கிறேன். எல்லோருக்கும் பல்லை பிடுங்கியுள்ளார்கள். நாங்கள் மூவரும் உடன்பிறந்த அண்ணன், தம்பிகள். ஒரே அறையில் ஜட்டியுடன் நிற்க வைத்து அடிக்கும் போது எங்களுக்கு எப்படி இருக்கும். நாங்களும் சாத்தான்குளம் மாதிரிதான். எங்களையும் கொலை செய்துவிட்டால் யாரும் கேட்க மாட்டார்களே. எங்களுக்கு பண பலம் கிடையாது.

கேங் வார் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். எங்களைப் பார்த்தால் தீவிரவாதி போல் உள்ளதா. அன்றாடம் உழைக்கிறோம். ஷூ காலுடன் என் அண்ணனை நெஞ்சில் மிதித்தார்கள். எனக்கும் மிதித்தார்கள். அவரால் சாப்பிட முடியவில்லை. 3 வேளையும் ஜூஸ் மட்டும் தான் குடிக்கிறார். எங்களால் ஸ்கேன் கூட பண்ண முடியவில்லை. போதுமான வசதி இல்லை. சாத்தான்குளம் மாதிரி தான் எங்களுக்கும் ஆகப்போகிறது என நினைக்கிறேன்” எனக் கூறினர்.

கருத்துகள் இல்லை: