வெள்ளி, 31 மார்ச், 2023

எம்ஜியார் போற்றிய நரிக்குறவர்கள் ...நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி பாடல் .. ஒரு திராவிட கருத்தியல்

 ராதா மனோகர் : நரிக்குறவர்களை ரோகிணி திரையரங்கம் அனுமதிக்க மறுத்த விவகாரம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
அன்றாட வாழ்வில் இது போல பல ஜாதிக்கொடுமைகள் இன்றுவரை அரங்கேறி கொண்டேதான் இருக்கிறது.
எல்லா கொடுமைகளுக்கும் ஊடாக வெளிச்சங்களை பெறுவதில்லை .
இந்த இடத்தில் எம்ஜியாரின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது!
ஒளிவிளக்கு படத்தில் வரும் நாங்க புதுசா கட்டிக்கிட்டா ஜோடிதானுங்க....
ஒளிவிளக்கு படத்தின் கதை விவாதத்தின் போது  குறவர் இனத்தை பெருமை படுத்துமாறு ஒரு காட்சி வையுங்கள் என்று  திரு எம்ஜியார் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி இருக்கிறது.
எம்ஜயினரின் கோரிக்கை படியே நாங்க புதுசா கட்டிக்கிட்டா ஜோடிதானுங்க என்ற பாடல் இடம்பெற்றது என்று தெரிகிறது.
பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களிலும் இதர சமூக கொண்டாட்டங்களின்போதும் தீவட்டி ஒளிபந்தங்களை காவிக்கொண்டு வரும் தொழிலையே நரிக்குறவர் சமுதாயமே மேற்கொண்டு வந்தது என்று ஒரு வரலாற்று செய்தியும் உண்டு.
ஒளி விளக்கு படத்தின் பெயரே இந்த தீவட்டி பணியாளர்களின் தொழிலை மேன்மை படுத்தும் ஒரு செயலாகத்தான் எம்ஜியார் வைத்திருக்க கூடும் என்று சிலர் கூறுகின்றனர்.


இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

(எனது கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் என்ற வரலாற்று குறுநாவலும் இந்த செய்தியை கொஞ்சம் உள்ளடக்கியது தான்.)

திராவிட சினிமாவையும் எம்ஜியாரையும் பிரித்து விட  முடியாது என்பதை அவரின் எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள்.
ஒளிவிளக்கு படம் வெளி வந்தபோது திரு. எம்ஜியார் திராவிட முன்னேற கழகத்தின் பொருளாளராக இருந்தார் என்பதை மறக்க கூடாது.
நாங்க புதுசு கட்டிக்கிட்டா ஜோடிதானுங்க பாடல் வரிக்குவரி திராவிட கருத்தியலை கொண்டிருந்தது
திமுகவின் ஒரு பிரசார பாடலாகவே இருந்தது!
அரசியல் ரீதியாக மனமாச்சரியங்கள்   இருந்தாலும் திராவிட இயக்கத்திற்கும் .. குறிப்பாக திராவிட சினிமாவுக்கும் அவர் ஆற்றிய பணியை காலம் கடந்தாவது நாம் நினைவு கூரவேண்டும்!

இன்னும் சரியாக சொல்லப்போனால் இன்றைய திரு எடப்பாடி திரு பன்னீர் திருமதி சசிகலாக்களின்  அதிமுகவை விட இன்றைய முதல்வர் ஸ்டாலின் திமுகவுக்கே திரு எம்ஜியார் அவர்கள் அதிகம் நெருக்கமானவராக தெரிகிறார்.

 

கருத்துகள் இல்லை: