புதன், 3 ஆகஸ்ட், 2022

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளின் வரலாறு

May be an image of 1 person

Susairaj Babu  :;   2016ஆம் ஆண்டு என் முகநூல் பதிவை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன், முழுமையாக படிக்க விரும்புவர்கள் படிக்கவும் தமிழை தமிழில் வரலாற்றை தமிழில் ஆர்வலர்களை  அறிய விரும்புவோர்களும் படிக்கவும்.
தமிழ் மொழியின் தூதர் என்று அறியப்பட்ட சேவியர் தனிநாயகம்    நினைவு தினம் செப் 2
    சிறப்பு பகிர்வு
சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில்  உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து திருவனந்தபுர மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றினார்.

அங்கே இருந்தபடி    The Carthaginian Clergy என்கிற தலைப்பில் இறையியலில்  முனைவர் பட்டம் பெற்றார். வடக்கன்குளத்தில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த அவர் குருசாமி என்பவரிடம் தமிழ் பயின்றார்.
அவருக்கு லத்தீன், ஸ்பானிஷ், பிரெஞ்சு,ஜெர்மன், போர்த்துகீஸ் முதலிய பல்வேறு மொழிகளில் தனித்த புலமை இருந்தது. ஆனாலும்,தன்னுடைய அன்னைத்தமிழின் இலக்கியங்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற எண்ணம் அவரை செலுத்தியது. அண்ணாமலைப்பல்கலையில் அவர் முதுகலை படிப்பில் இளங்கலையை பயிலாமலே  இணைய  அண்ணாமலை செட்டியார் அனுமதி கொடுத்தார்.   முப்பத்தி இரண்டு வயதில் தமிழ் மொழியை முறையாக அவர் பயின்று இன்பமுற்றார். எம்.லிட் பட்டத்திற்காக சங்க இலக்கியத்தில் இயற்கை என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். ரிக் வேதப்பாடல்களை படித்துவிட்டு ,"இந்தப்பாடல்களை விட சங்க இலக்கிய பாடல்கள் பல மடங்கு அற்புதமானவை !" என்று மெய்சிலிர்த்து சொன்னார்.
  1948 ஆம் ஆண்டு  தமிழ் இலக்கியக் கழகத்தை  தூத்துக்குடியில் நிறுவி பல்வேறு தமிழ் நூல்களை பதிப்பித்தார். அங்கே "Tamil Culture" என்ற ஆங்கிலக் காலாண்டிதழை வெளியிட்டார். தமிழின் பெருமையை உலகறிய செய்ய எண்ணிய அவர் பிற மொழிகளில் தமிழ் பற்றி வந்திருக்கும் குறிப்புகளை  'Reference Guide to Tamil Studies" என்ற நூறுக்கு சற்றே கூடுதலான குறிப்புதவி நூலில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பத்தி ஐந்து பிற மொழி நூல்களில் வழங்கி வரும் குறிப்புகளை பதிவு செய்தார்.  ஒன்பது வருடங்கள் இலங்கையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் லண்டன் பல்கலையில் தமிழ் இலக்கியம் வழியாக கல்வியியல் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து இரண்டாம் முறையாக முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மலேசியாவில் உள்ள பல்கலையில் இந்தியத்துறையில் தலைவராக இணைந்து தமிழ் பேராசிரியாக பணியாற்றினார். அப்பொழுது தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழறிஞர்களை இணைத்து உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று முனைந்தார். தமிழக அரசின் உதவியைக் கோரினார். அப்பொழுதைய பக்தவச்சலம் அரசு பெரிய ஈடுபாடு காட்டாமையால்  உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகத்தை  (International Association for Tamil Research, IATR)  பல்வேறு தமிழறிஞர்களோடு இணைந்து நிறுவினார்.  முதல் உலகத்தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் மலேசிய அரசின் உதவியோடு வெற்றிகரமாக அடிகள் நடத்தினார். அந்த அமைப்பே எட்டு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தியது. அதிலும் நான்கு உலகத்தமிழ் மாநாடுகள் அடிகளார் வாழ்நாள் காலத்திலேயே நடந்தது.
"இலத்தீன் சட்டத்தின் மொழியென்றால்,பிரெஞ்சை ராஜதந்திரத்தின் மொழி என்போம் என்றால்,ஜெர்மன் அறிவியலின் மொழி மற்றும் ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றால் தமிழ் பக்தியின் மொழி !" என்று முழங்கிய அடிகளார் தமிழின் பண்டைய இலக்கியங்கள் எப்படி வடமொழி இலக்கியங்களை போல அல்லாமல் சமயச்சார்பற்று விளங்கின என்பதை நிறுவினார். தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செறிவையும்  ஜப்பான்,சிலி,பிரேசில்,அமெரிக்கா முதலிய நாடுகளில் இருநூறு சொற்பொழிவுகள் மற்றும் பாடம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்.  தாய்லாந்தில் தங்கியிருந்த பொழுது அங்கே மன்னரின் முடிசூட்டு விழாவின் பொழுது பாடப்படுவது திருவெம்பாவை பாடல் என்பதை கண்டறிந்து உலகுக்கு சொன்னார்.
ஆசிய மொழிகளிலேயே முதலில் அச்சடிக்கப்பட்ட நூல் வெளியான மொழி தமிழ் என்பதை கார்த்திலியா  (1556),தம்பிரான் வணக்கம் (1578), கிறிஸ்தியானி வணக்கம் (1579) முதலிய அரிய அச்சு நூல்களின் மூலப்பிரதிகளை தேடிக்கண்டெடுத்து பதிப்பித்து நிரூபித்தார். தமிழின் ஆய்வுமுறையில் வரலாறு, பண்பாடு, ஒப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றை இணைத்து ஆய்வு செய்யும் போக்கை ஏற்படுத்தியதில் அவர் முன்னோடியாக இருந்தார். தன்னுடைய இறுதிக்காலத்தில்  ஈழத்தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்தினார். அதில்  "தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச் சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கைகளையும் அவர்கள் கடைபிடித்தே வந்தனர், இன்றும் கடைபிடித்தே வருகின்றனர்''. என்று பெருமை பொங்க சொன்னார். 'உலகெங்கும் உலாவும் தமிழ் மொழியின் தூதர்' என்று அறியப்பட்ட தனிநாயகம் அடிகளை நினைவில் நிறுத்துவோம். அவரின் நினைவு தினம் செப் 2

கருத்துகள் இல்லை: