சனி, 23 அக்டோபர், 2021

சமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள் நியமனம்!

சமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள் நியமனம்!

 minnambalam சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்க: ளை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ”சமூகநீதிக் கண்காணிப்பு குழு” அமைக்கப்படும். இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும்.

இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் என்று சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளான கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

தற்போது, சமூகநீதிக் கண்காணிப்பு குழுவினை அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்டோபர் 23) உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவின் தலைவராக சுப. வீரபாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக முனைவர் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதி கண்காணிப்புக் குழுவானது, சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் (உறுப்பினர்-செயலராக) அங்கம் வகிப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சுப.வீரபாண்டியன்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவி, தற்போதுவரை அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ‘கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதம் இருமுறை இதழின் ஆசிரியராக உள்ள இவர், இலக்கியம், அரசியல், வரலாறு, எனப் பல்வேறு துறைகளில் 21 நூல்களை எழுதியுள்ளார். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துக்களை பரப்பி வருகிறார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநலன் குறித்து, பேசியும் எழுதியும் வருபவர். தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு அறிவுரை குழு உறுப்பினராகவும் உள்ள இவர், தற்போது சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முனைவர் தனவேல்

முனைவர் தனவேல் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்

இவர், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த நீண்ட அனுபவம் பெற்றவர். மேலும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைத் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

வரலாறு மற்றும் ஊடகத்துறையில் இரண்டு முதுகலை பட்டங்கள் பெற்றவர். இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான சன்ஸ்கிருதி சம்மான் விருதினைப் பெற்றவர். 'இந்தியா டுடே' இவரை தமிழகத்தின் செல்வாக்குமிக்க 10 மனிதர்களில் ஒருவராக இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்ததும், 'ஆனந்தவிகடன்' தமிழகத்தின் 'டாப் 10' மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜெய்சன்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் நீண்ட அனுபவம் கொண்டவர்.

பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன்

கடந்த 36 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றியவர். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

திரு. கோ. கருணாநிதி

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகநீதியை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அறிமுகம் செய்தவர்.

கருத்துகள் இல்லை: