வெள்ளி, 1 மே, 2020

டி ராஜேந்தர் .. இளையராஜா ரசிகர்களையும் கட்டிப்போட்டு வைத்த கலைஞர்

வெங்கடேஷ் ஆறுமுகம் : கவியரசு தெரியும் கவிப்பேரரசு தெரியும் காதல் கவியரசு யார் தெரியுமா? மக்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில்
கிண்டலடிக்கும் டி.ஆர் தான்..எப்படின்னு கேட்டா இந்தப் பதிவினை படித்தால் உங்களுக்குத் தெரியும்! தாடி என்றோ, டண்டணக்கா என்றோ, நாம் கலாய்க்கும் டி.ஆர். காதல் வரிகளில் கிங்!
இளையராஜா ரசிகர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்த அவரது திறமை அளவிட முடியாதது. இசையை விடுங்கள் அவரது பாடல் வரிகளில் துள்ளும் காதலைப் பாருங்கள். இனி அவரது பாடல்களின் லிஸ்ட்.
"இது குழந்தை பாடும் தாலாட்டு" இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம் (ஒரு தலை ராகம்) இந்தப் பாடல் வரிகளில் எல்லாமே நெகட்டிவாக இருக்கும். ஆனால் அமங்கலமாக இருக்காது! தமிழ் விளையாடும், "நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன், வெறுங் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" அற்புதமான கற்பனையது!
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி விட இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா.!
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் பாடலில் செம்மார்ந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்(இரயில் பயணங்களில்)

நெஞ்சம் பாடும் புதிய ராகம் பாடல் ஒன்றைத் தேடுது (நெஞ்சில் ஓர் ராகம்) இதன் சரணங்கள் எல்லாம் வார்தைகளில் விளையாடியிருப்பார்!
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேறுதாம் ஓ..ஓ.ஓ.. பாடல் ஒரு கிளாசிக் ரகம்! அப்பாடலின் சரணத்தில் “உன் நினைவென்னும் காற்றினிலே.. மனம் என்னும் மரம் ஆட.. அடடா என்ன ஒரு அழகு.!
இதே படத்தில் "அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது" பாடலின் சரணத்தில் விழியோஓ ஓ ஓ ஓ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை.. மொழியோ அமுதம் குழலாகி தொனிக்கின்ற ஓசை.. ஒரு ஆனந்த ராகம்..(கிளிஞ்சல்கள்)
இந்திரலோகத்து சுந்தரி பாடலில் பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச்சென்றாள் இந்த மானிடனும் மயங்கிவிட்டான் அந்த மானிடமும் மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்!
உன்னைத்தானே அழைத்தேன் பாடலில் புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்து, அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை ஒரு நாகம் போல் காளை ஆடுகின்றான் ஒரு பூவென்று காலைத் தொழுகின்றான் கற்பனை செய்கிறான்! (உயிருள்ளவரை உஷா)
அதே படத்தில் மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க பாடலின் சரணத்தில், பிரம்மனுக்கும் ஞானம் வந்து உன்னைப்படைக்க அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க... தவிப்பதா, சிலிர்ப்பதா, அணைப்பதா, அழைப்பதா..
“அதே படத்தில் வைகைக்கரை காற்றே நில்லு வஞ்சி தனை பார்த்தா சொல்லு” இன்னுமொரு கிளாசிக்.!
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே.. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே! எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி..
(உறவைக் காத்த கிளி)
தங்கைக்கோர் கீதத்தில் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது, பூக்களைப் பறிக்காதீர்களில் சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. & மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது.!
இராகம் தேடும் பல்லவியில் மூங்கிலிலே பாட்டிசைத்து, பூக்கள் விடும் தூது மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்,
நெஞ்சில் ஒரு ராகத்தில் இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும், பூப்பூவா பூத்திருக்கு "வாசம் சிந்தும் வண்ணச் சோலை என் வாசல் தேடி வந்த வேளை!
இன்னும் என் தங்கை கல்யாணி முதல் மோனிஷா என் மோனோலிசா வரை ராஜேந்தரின் அழகுத் தமிழ் விளையாடிய பாடல்கள் ஏராளம்! முத்தாய்ப்பாக,
மைதிலி என்னைக் காதலியில் ஒரு பொன்மானை நான் காண பாடலின் சரணத்தில் "தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாற தாமரைப்பூ மீது விழுந்தனவோ, இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ, இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள், கலைநிலா மேனியிலே சுளை பலா சுவையைக் கண்டேன்!
ஆஹா! நன் சொன்னது சரிதானே டி.ஆர் ஒரு காதல் கவியரசு என்று!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

"இது குழந்தை பாடும் தாலாட்டு" இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம் (ஒரு தலை ராகம்) இந்தப் பாடல் வரிகளில் எல்லாமே நெகட்டிவாக இருக்கும்

இது இல்பொருள் உவமை அணி - தாங்கள் நெகட்டிவ் என குறிப்பிடுவது தவறு

Unknown சொன்னது…

உண்மை.. மிக மிக அருமை