செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கிம் எங்கே….? அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?


tamil.news18.com  : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாததால், அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
கிம் எங்கே….? அவர் உயிருடன் இருக்கிறாரா? கொரோனா தொற்றால் உலகமே உறைந்துபோயுள்ள இந்த சமயத்திலும், கடந்த சில நாட்களாக இந்த கேள்விக்கான விடை தேடி களமிறங்கியுள்ளன சர்வதேச ஊடகங்கள்.
அனைத்து பலங்களும் பொருந்திய அமெரிக்காவையே மிரட்டும் வல்லமை படைத்த மிகச்சிறிய நாடு வட கொரியா. அந்தவகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வல்லரசுகளுக்கு சிம்மசொப்பனம் என்றால் அது மிகையாகாது. மார்ச் மாத இறுதியில் கொரேனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கியிருந்த நிலையில், வடகொரியாவோ வழக்கம்போல் ஏவுகணை சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தது.
உலக வரைபடத்தில் ஒரு புள்ளி விடாமல், அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா பரவியுள்ள சூழ்நிலையில், வட கொரியா மட்டும் அதற்கு விதிவிலக்கு என்று கூறி வருகிறது அந்நாட்டு அரசு. இருந்தபோதும், கொரோனா பரவலை வடகொரியா மறைப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டியபோதும், அது பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை அதிபர் கிம் ஜாங் உன்

ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம் 15-ம் தேதி, வட கொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, நடைபெற்ற விழாவில் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்தே அவரைப்பற்றி வதந்திகள் பரவத்தொடங்கின.

கிம், இதய கோளாரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சில செய்திகள் வெளியாகின. கொரோன வைரசுக்கு பயந்து அவர் ஒளிந்துகொண்டிருப்பதாக சிலர் கூறினர். அவர் இறந்துவிட்டதாகவும், அதை வட கொரிய அரசு மறைப்பதாகவும் வதந்தி பரவியது.உலகையே அச்சுறுத்தும் கிம் ஜாங் உன்னுக்கு விமானத்தில் பறப்பதற்கு பயம். ஆகவே, அவர் உள்நாட்டில் பயணம் செய்தாலும், அண்டை நாடான சீனாவுக்கு சென்றாலும் கூட ரயிலிலேயேதான் செல்வார். வடகொரியாவை தொடர்ந்து வேவுபார்த்து வரும் "38 நார்த்" என்ற இணையதளம், கிம் பயன்படுத்தும் ரயில் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பதை செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி செய்துள்ளது. வடகொரியாவில் சந்தேகத்திற்குரிய எந்த நடவடிக்கையும் இல்லை எனபதை தென்கொரியாவும் உறுதி செய்துள்ளது.

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் அவர் உயிருடன் இருப்பதாகவும், ஏப்ரல் 13 முதல் வோன்சான் பகுதியில் தங்கியிருப்பதாகவும் மூன் சங் இன் தெரிவித்துள்ளார். சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் மூன் சங் இன் தெரிவித்துள்ளார்.

கிம் குறித்து உலவிவரும் வதந்திகளுக்கு இதுவரை பதிலளிக்காத வட கொரிய ஊடகம், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், கிம் ஜாங் உன் நலமுடன் இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

கிம் இதுபோன்று காணாமல்போது இது முதல் முறையல்ல. 2014ஆம் ஆண்டு மாதக்கணக்கில் காணாமல் போன அவர் திடீரென்று ஊடகத்தில் காட்சியளித்து ஆச்சர்யம் அளித்தார். அதேபோல் மீண்டும் அதிர்ச்சி அளிப்பாரா?

கருத்துகள் இல்லை: