திங்கள், 27 ஏப்ரல், 2020

245 ரூபாய் பொருள் 600 ரூபாய்: அம்பலத்துக்கு வந்த ரேபிட் கிட் ஊழல்!

245 ரூபாய் பொருள் 600 ரூபாய்: அம்பலத்துக்கு வந்த ரேபிட் கிட் ஊழல்!மின்னம்பலம் : கொரோனா தொற்றினை சுகாதாரப் பேரிடர் என்று மத்திய
அரசு அறிவித்து, அது பொருளாதாரப் பேரிடராகவும் மாறிவிட்ட நிலையில்... ரேபிட் கிட் விலை 400 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரேபிட் கிட்ஸ் இறக்குமதி செய்த நிறுவனத்துக்கும், விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கும் இடையே நடந்த வழக்கில்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம்.
ரேர் மெட்டாபாலிக் லைஃப் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும், மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையில் நடந்த வழக்கில்தான் டெல்லி உயர் நீதிமன்றம், “தனியார் நிறுவனங்களின் ஆதாயம் என்பது பொது ஆதாயத்தை விட பெரிது கிடையாது. இந்த விஷயத்தில் பொது நலனே முக்கியம்’ என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதாவது மேட்ரிக்ஸ் லேப்ஸ் சீனாவில் இருந்து கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகளை இறக்குமதி செய்வது என்றும், அதை ரேர் மெட்டாபாலிக் லைஃப் சயின்ஸ் விநியோகிப்பது என்றும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
முன்னதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்திடம் ஒரு ரேபிட் கிட் 600 ரூபாய் என்ற விலையில், ஐந்து லட்சம் கருவிகளை ஆர்டர் செய்தது. அதன் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய். மேட்ரிக்ஸ் ஆய்வகங்கள் இறக்குமதியாளராக இருப்பதால், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் (டி.சி.ஜி.ஐ) மருத்துவப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தைப் பெற்றது. இந்த நிலையில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனம் மேட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு ஐந்து லட்சம் கருவிகளுக்கு உரிய ரூ.12.75 கோடியை செலுத்தியுள்ளது. இது இறக்குமதிக்கான அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது. ஒரு கிட் ஒன்றுக்கு 225 ரூபாய் மற்றும் கூடுதல் செலவு 20 எனில், மொத்தம் 245.
இந்நிலையில் ஐசிஎம்ஆரிடம் இருந்து ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்துக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வாங்கிய கிட்களுக்கான பணமே செலுத்தப்படவில்லை. இந்நிலையில் மேட்ரிக்ஸ் லேப்ஸ் தனது விநியோகஸ்தரான ரேர் மெட்டாபாலிக்கிடம் உடனடியாக பணம் கேட்டது. ரேர் மெட்டபாலிக்கோ, ஐசிஎம்ஆர் பணம் கொடுத்த பிறகுதான் கொடுக்க முடியும் என்றது. இதனால் அடுத்தகட்ட ஆர்டரைப் பெறுவதில் ரேர் மெட்டாபாலிக் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதுவே உயர் நீதிமன்றத்துக்கு வழக்காக வந்தது.
ஐ.சி.எம்.ஆரைத் தவிர, மேட்ரிக்ஸ் லேப்ஸ் நிறுவனம் ஒரு கிட் 600 ரூபாய் என்ற விகிதத்தில், இடைத்தரகர் ஷான் பயோடெக் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 50,000 கிட்களை வழங்குவதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. 245 ரூபாய் மதிப்புள்ள கிட் 600 ரூபாய்க்கு ஐசிஎம் ஆருக்கு தெரிந்தே வாங்கப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது.
"ஒரு கிட் 245 ரூபாய்க்கு வாங்கும் பட்சத்தில் 400 ரூபாய்க்கு விற்பதே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விற்பனையாளருக்கு போதுமானதை விட அதிகமான லாபம்தான். நாடு முழுவதும் அவசர சோதனைகளுக்காக குறிப்பாக உலகளாவிய தொற்றுநோயின் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளில் ... பொது நலன் என்பது தனியார் லாபத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, ஜி.எஸ்.டி உள்ளிட்ட ஒரு கிட் ரூ .400 க்கு மிகாமல் விற்கப்பட வேண்டும் "என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்ரல் 14 ஆம் தேதி மின்னம்பலத்தில் எடப்பாடி-விஜயபாஸ்கர்: இடையில் வெடித்த டெல்லி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “தமிழக அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை வாங்க முடிவு செய்து, அதற்காக சில கம்பெனிகளோடு பேசியது.
குறிப்பிட்ட சில கம்பெனிகள் ஏற்கனவே பல மாநில அரசுகளுக்கும் இக்கருவிகளைத் தயாரித்து அனுப்பி வருகின்றன. ஆனால் தமிழக அரசுக்கும் அந்த கம்பெனிகளுக்கும் இடையே முடிவு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் முக்கியமான சில கம்பெனிகள் டெல்லி வரை சென்று பிரதமர் அலுவலகம் வரை தமிழ்நாட்டு விவகாரம் பற்றி முறையிட்டன. சில நாட்களில் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ‘இந்த மாதிரியான சுகாதார எமர்ஜென்சி நேரத்தில் கூடவா உங்கள் சுகாதாரத் துறை அமைச்சர் இப்படி நடந்துகொள்வார்? இது உங்களுக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா?’ என்று வீரியமாகக் கேட்டுத் தகவல் அனுப்பினார்கள். பின் இதுபற்றி விஜயபாஸ்கருடன் முதல்வர் பேசினார். அதன் பிறகே கொஞ்சம் தாமதமாக மருத்துவ உபகரணங்கள் தமிழக மருத்துவமனைகளுக்குக் கிடைத்தன” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ரேபிட் கிட்ஸ் இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கும், விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்சினையால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரேபிட் கிட் உள்ளிட்ட கொரோனா தொடர்பான மருத்துவக் கருவிகள் நியாயமாக முறையாக இல்லை என்பது மேலும் ஊர்ஜிதமாகிறது. இதெல்லாம் கொரோனா கிருமிக்குத் தெரிந்தால், ‘நம்மைவிட அதிக நச்சுக்கிருமிகள் இந்தியாவில் இருக்கின்றனவே’ என்று வெட்கித் தலைகுனியும்!
-வேந்தன்

கருத்துகள் இல்லை: