ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை நீக்கம் செய்வதற்கு தடை கோரி வழக்கு!

nakkheeran.in - அதிதேஜா : சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்  அருண் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில் "கடந்த 30 நாட்களாக தமிழகத்தில் ஒரு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால்,  வேலைக்குச் செல்ல முடியாமல் தொழிலாளர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்.  சில தொழிலாளர்கள் வீட்டிலிருந்து அந்த நிறுவனங்களுக்கு பணியாற்றுகிறார்கள். சில தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு புதிய சம்பளம் இந்த நேரத்தில் கொடுப்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்ட சம்பளத்தைத்தான் கொடுக்கிறார்கள்.
மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்த வண்ணம் உள்ளன. மத்திய அரசு ஆலோசனையின்படி கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் எந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க கூடாது என்று அந்தந்த மாநில அரசுகள் அரசாணை வெளியிட்டுள்ளன.
ஆனால்,  தமிழகத்தில் இதுவரை, இதுதொடர்பாக எந்த அரசாணையும் வெளியிடவில்லை.  கட்டுமான கம்பெனிகள், ஐடி நிறுவனங்கள்,  பல தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து விட்டன.


இது அவர்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.  எனவே தமிழக அரசு, தனியார் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்களை நீக்கம் செய்வதற்கு  தடை விதிப்பது தொடர்பாக ஒரு அரசாணை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அமர்வு விசாரித்து,  அடுத்த வாரம் தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்ய  வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: