வியாழன், 23 ஜனவரி, 2020

நித்தியின் இருப்பிடம்: காட்டிக்கொடுத்த வங்கிக்கணக்கு! வானது தீவு !

நித்தியின் இருப்பிடம்: காட்டிக்கொடுத்த வங்கிக்கணக்கு!  
மின்னம்பலம் : பாலியல் வன்கொடுமை, கடத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகித் தலைமறைவாகியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா வனுவாட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பெங்களூருவில் பிடதி ஆசிரமத்தை நடத்தி வந்த நித்யானந்தா நாளடைவில் தனது ஆசிரம கிளைகளை வெளிமாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் பரப்பினார். எந்த அளவுக்கு அவரது ஆசிரமங்கள் வளர்ச்சி அடைந்ததோ, அதே அளவுக்கு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, கடத்தல், பணம் பறித்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டன. இதன்மூலம் தனக்கு நெருக்கடிகள் அதிகரித்ததை அடுத்து நித்தி தலைமறைவானார். நேபாளில் இருக்கிறார், ஈகுவாடரில் இருக்கிறார் என நாள்தோறும் ஒரு தகவல் வெளியானது.
அவரது இருப்பிடத்தைக் கண்டறியக் குஜராத் போலீசாரும், கர்நாடகா போலீசாரும் இண்டர்போல் உதவியை நாடினர். அதன்படி இண்டர்போல் நேற்று நித்திக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டது.


இந்நிலையில் பசிபிக் தீவு நாடான வனுவாட்டில் இருந்து நித்யானந்தா தனது வங்கிக் கணக்கு மூலம் தொழிலை நடத்தி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஒரு பூஜைக்கு பணம் செலுத்துவது தொடர்பான விவரங்களைத் தேடியபோது, ஒருவருக்கு நித்யானந்தாவுக்கு நம்பிக்கைக்குறியவர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
இந்த மின்னஞ்சல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியான வனுவாட்டு தேசிய வங்கியின் போர்ட் விலா கிளையில் 'கைலாசா
லிமிடெட்' க்கான கணக்கு இருப்பதாகத் தெரிகிறது. மேலும், யாரேனும் பூஜைக்காகப் பணம் அனுப்ப வேண்டுமானால் கைலாசா லிமிடெட் என்ற கணக்குக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வரி இல்லாத புகலிடமாக இந்த தீவு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வங்கி ரகசிய சட்டங்களையும் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ரகசியத்தன்மையை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை: