வியாழன், 23 ஜனவரி, 2020

மும்பை இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும்! சென்னை?

மும்பை இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும்!  சென்னை? மின்னம்பலம் : இந்தியாவின் தூங்காத நகரம் என்று அழைக்கப்படும் மும்பை, இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவை நேற்று (ஜனவரி 22) கூடியபோது மால்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் கடைகளை அடுத்த திங்கட்கிழமை (ஜனவரி 27) முதல் இரவு பகலாக 24 மணி நேரமும் செயல்பட அனுமதித்துள்ளது.
முதல் கட்டத்தில், குடியிருப்பு அல்லாத பகுதிகளில் அமைந்துள்ள மால்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரம் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே இந்தக் கொள்கையின் பின்னணியில் உள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, லண்டனின் ‘இரவு பொருளாதாரம்’ ஐந்து பில்லியன் பவுண்டுகள் என்று குறிப்பிட்டுள்ள ஆதித்யா, “அரசாங்கத்தின் முடிவு, சேவைத்துறையில் தற்போதுள்ள ஐந்து லட்சம் பேருக்கு கூடுதலாக, அதிக வருவாய் மற்றும் வேலைகளை உருவாக்க உதவும். அதேநேரம் கடைகள், மால்கள் மற்றும் உணவகங்களை இரவில் திறந்து வைப்பது கட்டாயமில்லை” என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம் மும்பையின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இதேபோல சென்னையையும் அறிவித்தால் சென்னையின் பொருளாதாரமும் அதிகரிக்கும், அதேநேரம் மும்பையும் சென்னையும் ஒன்றல்ல என்ற ஒப்பீடுகளும் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: