புதன், 28 டிசம்பர், 2016

போலித் திராவிடம் ஆளட்டும். தோல்வித் திராவிடம் தொடரட்டும்!

சுவரொட்டிகளில் உள்ள சசிகலா படங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் சாணி அடிப்பதை வைத்து, அவரது தலைமையிலான அ.தி.மு.க.வை எதிர்கொள்வது எளிது என்றும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஊடுருவலைத் தடுத்துவிட முடியும் என்றும் இங்கே சில தி.மு.க.வினர் உள்ளிட்ட திராவிடப் பெருந்தகைகள் கணக்குப் போடுகிறார்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா-ஜெ என அ.தி.மு.க இரண்டானபோது, அதே அ.தி.மு.க. தொண்டர்களில் ஒரு பகுதியினரும், அதன் நிர்வாகிகளில் பெரும்பகுதியினரும் ஜெயலலிதாவை மிகக் கடுமையான-கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்தனர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருந்த வளர்மதி, காளிமுத்து போன்றவர்களின் பிற்காலம் அதே ஜெயலலிதாவைப் பாராட்டி அவர் காலடியில் வீழும் அளவுக்கு அமைந்தது. ஜனநாயகக் களத்தில் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையிலான வெற்றியே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அந்த வெற்றியை ஜெயலலிதா அடைந்தபிறகு, ஓ.பி.எஸ் உள்பட ஒரு காலத்தில் அவருக்கு எதிரான அரசியலை செய்தவர்கள்தான் அவருடைய தீவிர விசுவாசிகளாயினர். இது சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.விலும் தொடரும் வாய்ப்புள்ளது.
ஓட்டு அரசியலுக்கான சாதி பலம் சசிகலாவிடம் உள்ளது. (அந்தக் கண்ணோட்டத்தில் சசிகலாவை ஆதரிக்கும் தி.மு.க.வினரின் கொண்டைகள் அவ்வப்போது வெளிப்படுகின்றன). பிற சாதியினரை சமாளிக்கும் அதிகாரமும் நான்கரை ஆண்டுகால ஆட்சி என்கிற அற்புத விளக்கும் சசிகலாவிடம் உள்ளன.
சொத்து குவிப்பு வழக்குக்கு அப்பாலும் குவிக்கப்பட்ட சொத்துகள் சசிகலா தரப்பிடம் குவிந்திருக்கின்றன. எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான சரியான விலையை நிர்ணயித்து, கொள்முதல் செய்யும் வியூகமும் உண்டு. இருக்கின்ற பணத்தை அவரவருக்கான விலைக்கேற்றபடி செலவு செய்து தன் வசமாக்குவது அ.தி.மு.க.வுக்கு கை வந்த கலை. (சுட்டுப் போட்டாலும் எத்தனை முறை சூடு பட்டாலும் தி.மு.க.வுக்கு இது வரவே வராது).
இந்த வேலையை இன்னாரிடம் கொடுத்து செய்து முடிக்கும் கட்டமைப்பும் அ.தி.மு.க தலைமையிடம் கச்சிதமாக இருக்கிறது. என்னதான் ஒதுக்கி வைப்பதாகச் சொல்லப்பட்டாலும், மனைவிக்குத் தொண்டு செய்யும் கணவனாக எம்.நடராஜன் தனது பணிகளை செவ்வனே செய்து வருகிறார். அ.தி.மு.க பலவீனமானால் பா.ஜ.க ஊடுருவி விடும் என்ற பயத்தை விதைத்து, ‘பச்சைத் தமிழச்சி’ சசிகலாவின் தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் அணிவகுக்கச் செய்யும் பெரும்பணியை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மூலம் நிறைவேற்றும் அதே எம்.நடராஜன்தான், டெல்லியில் பா.ஜ.க அரசிடம் சரணாகதி அடைய வைகோ-மோடி நட்புறவைப் பயன்படுத்துகிறார். பா.ஜ.க..வின் எதிர்துருவமான காங்கிரஸ் தரப்பின் ஆதரவுக்கு பழைய அ.தி.மு.க.காரரான திருநாவுக்கரசர் இருக்கிறார். அப்புறம் வழக்கம்போல தி.மு.க.வைத் திட்டி அ.தி.மு.க. பல்லக்கைத் தூக்க அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கோஷ்டிக்கும் எம்.நடராஜன்தான் புரவலர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பலமான இயக்கமாக உள்ளது அ.தி.மு.க.
இத்தனை பலம் கொண்ட கட்சிக்கு சசிகலா தலைமையேற்றால் அது டம்மி பீஸாகிவிடும் என தி.மு.க.வினர் சிலர் உள்ளிட்ட திராவிடச் சிந்தனையாளர்கள் கணக்குப் போடுவது விந்தையாக இருக்கிறது. தமிழக வாக்காளர்களில் ஏறத்தாழ 90% பேர் அ.தி.மு.க-தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையே ஆதரிக்கும் நிலையில், டெல்லியில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பா.ஜ.க. இங்கே வளர்ந்துவிடும் என பயப்படுவோரைப் பார்த்தால், தெனாலி கமல்ஹாசன் முகம்தான் நினைவுக்கு வருகிறது.
இது 1976, 1991 காலகட்டம் கிடையாது. மத்திய அரசு மூக்கை நுழைத்தால் சட்டரீதியாக அதை அறுக்க முடியும் என்பதை சின்ன மாநிலமான அருணாசலப் பிரதேசம்கூட நிரூபித்திருக்கிறது. அதை மறந்து, தமிழகத்தை சின்னம்மா மாநிலமாக்கிவிட்டால் பா.ஜ.க ஊடுருவலைத் தடுக்கலாம் எனத் திராவிடப் பெருந்தகைகள் நினைக்கிறார்கள். தங்களின் பலவீனத்தை சரி செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், டெல்லி எதிரியின் பலத்தை பூதாகரமாக்கும் காட்சிகள் அரங்கேறுகின்றன.
உங்கள் எண்ணங்கள் நிறைவேறட்டும். போலித் திராவிடமான அ.தி.மு.க ஆட்சியை அனுபவித்து செழிக்கட்டும். தேர்தல் களத்தில் தோல்வித் திராவிடமாக தி.மு.க தொடரட்டும்.  முகநூல் பதிவு  கோவி லெனின்

1 கருத்து:

IBC Tamil சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.