வியாழன், 17 நவம்பர், 2016

குலாம் நபி அசாத்:நோட்டு செல்லாது என்பது மக்கள் மீது பாஜகவின் பயங்கரவாத தாக்குதல் போன்றது

500, 1000 ரூபாய் தடை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே அவர்களின் நட்பு தொழில் அதிபர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு தெரியும்
புதுடெல்லி. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் மத்திய அரசின் தவறான கொள்கையை, உரி பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசியதால் கடும் மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பாராளுமன்றம் இதனால் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் 500, 1000 ரூபாய் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 500, 1000 ரூபாய் தடை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே அவர்களின் நட்பு தொழில் அதிபர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு தெரியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியது இருதரப்பு அமளியை ஏற்படுத்தியது. 

குலாம் நபி ஆசாத் பேசுகையில், மக்கள் உயிரிழப்பிற்கு பாரதீய ஜனதாவே காரணம் என்றார். உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது இறந்தவர்களைவிட, 500, 1000 ரூபாய் தடை விவகாரத்தில் மத்திய அரசின் தவறான கொள்கையினால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்று ஒப்பிட்டு பேசிய அவர், பிரதமர் மோடி விவாதத்திற்கு அவைக்கு வராதவரையில் நாங்கள் அவையை செயல்பட விடமாட்டோம் என்றார். 

இதனையடுத்து மத்திய மந்திரி வெங்கையா நாய்டு, ”இவ்விவகாரத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு தேசத்தை எதிர்க்கட்சி தலைவர் அவமதித்துவிட்டார், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.  

உடனடியாக குலாம் நபி ஆசாத் பதிலளிக்கையில், “நீங்கள் (பாரதீய ஜனதா) பாகிஸ்தான் சென்று திருமண நிகழ்ச்சி மற்றும் பிற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தீர்கள், நீங்கள் இதனை எங்களிடம் சொல்கிறீர்கள்?,” என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மாநிலங்களவையில் ஏற்கனவே மையப்பகுதிக்கு வந்த உறுப்பினர்களும், பிற உறுப்பினர்களும் கடும் கூச்சலிட்டனர். அமளியை குறைக்க மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் முயற்சி செய்தார். எதிர்க்கட்சியினர் அமளிக்கு இடையே குரியன் சீதாராம் யெச்சூரியை பேசுவதற்கு அழைத்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து குரியன் “நீங்கள் மேற்கு வங்காள அரசியலை இங்கு கொண்டுவராதீர்கள்,” என்றார். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சியின் தரப்பில் கோஷம் எழுப்பட்டது.

இருதரப்பினரும் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை: