வியாழன், 17 நவம்பர், 2016

முடங்கிய அவைகள்:தலைவர்கள் உரை!


minnambalam.com :நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று புதன்கிழமை (16-11-2016)அன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கிய முதல் தினத்திலேயே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் விவாதம் நடத்தியிருக்கின்றன. அதிகாரபூர்வமாக செய்தி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தகவலை தனியே வெளியிட்டது குறித்து, கூட்டு பாராளுமன்றக் கமிட்டி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளநிலையில், மாலை 6 மணி வரை தொடர்ந்து நடந்த விவாதத்தை அவையின் துணை சபாநாயகர் வியாழன் காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார். வியாழன் மதியம் இரண்டு மணிக்கு விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பிறகு, வியாழன் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுக என அனைத்துக் கட்சிகளும் ஒரு அணியாகத் திரண்டு, அரசை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. குறிப்பாக, பிரதமர் மோடி அமல்படுத்தியிருக்கும் இந்த நடவடிக்கை, ‘மோசமான நேரத்தில்’ சாதாரண மக்களையும் விவசாயிகளையும் ஏழை மக்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனந்த் ஷர்மா : காங்கிரஸ் கட்சி
ராஜ்ய சபா எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஆனந்த் ஷர்மா, குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் தகவலை முன்னரே கசியவிட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் பேசியபோது, ‘அவர்களுடைய எழுபது வருட சம்பாத்தியத்தை இழந்ததன் காரணமாக அவர்கள் என்னை அழித்துவிடுவார்கள், என்னைக் கொன்றுவிடுவார்கள்’ என்று பேசியதைக் குறிப்பிட்டு, ‘யார் அவரை கொல்ல நினைக்கிறார்கள்’ எனக் கேட்டார். நரேந்திர மோடி, 2014 தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய 15 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், ‘சமீபத்தில், காசிபூர் பேரணி நடத்தியதற்கு கிரெடிட் கார்டு வழியாகவா பணம் செலுத்தினீர்கள்’ எனக் கேட்டார்.
மாயாவதி : பகுஜன் சமாஜ்
‘பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் (அரசு) தயாராக இருந்திருந்தால், இன்று இதுவெல்லாம் நடந்திருக்காது. பலர் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் விற்க அரசு உடந்தையாக இருக்கிறது. கடந்த பத்து மாதங்களாக, பாஜக ஆதரவாளர்களும் பெரும் வணிகர்களும் தங்கள் கறுப்புப் பணத்தை மாற்றிக்கொள்ள பாஜக அரசு உதவியிருக்கிறது’ என்றார்.
சரத் யாதவ் : ஜனதா தளம்
‘ஓடும் ரயிலில் இருந்து குதிக்கச்சொல்வது’போல இந்த நடவடிக்கை இருக்கிறது. பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்கள் என மோடி சொன்னது தவறு. ஏழைகள், உடல் ஊனமுற்றோர், வயது முதிர்ந்தவர்கள்தான் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தைப் பெற வரிசையில் நிற்கிறார்கள். விஜய் மல்லையாவின் 1200 கோடி ரூபாய் உட்பட, ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் தள்ளுபடி ஆகியிருக்கும்நிலையில், நாட்டில் இருக்கும் நேர்மையான மக்களை மோடி வரிசையில் நிற்கச் செய்திருக்கிறார்’ என அவர் கூறினார்.
சீதாராம் யெச்சூரி : மார்க்சிஸ்ட் தலைவர்
‘130 கோடி மக்கள்தொகை இருக்கும் நம் நாட்டில், வெறும் 2.6 கோடி மக்களிடம்தான் கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன என்றார்கள். ஃப்ரெஞ்சு புரட்சியின்போது, ‘மக்களிடம் ரொட்டிகள் இல்லையென்றால் அவர்கள் கேக் உண்ணட்டும்’ என்ற மரி அண்டோனெய்ட் குறித்துப் பேசிய சீதாராம் யெச்சூரி, ‘நம்மிடம் மோடி அண்டோனெய்ட் இருக்கிறார். பேப்பர் (காகிதம்) இல்லையென்றால் பிளாஸ்டிக் பயன்படுத்துங்கள் என்கிறார்’ எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: