சனி, 6 பிப்ரவரி, 2016

திருமாவளவன்:ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்: நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்

ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரம் சந்தேக மரணங்கள் என்பது
இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் தலித்துகள் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. உண்மையை வெளிப்படுத்த தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,<>தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை தேசியக் குற்ற ஆவண மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியது.  இப்போது தமிழகக் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி திரு. ராஜேஷ் தாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் தலித்துகள் சந்தேகமான முறையில் மரணமடைவதாகவும், அதில் 45 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை வழக்குகள் சிலவற்றைப் புலனாய்வு செய்தபோது அவை தூண்டுதலின்பேரில் செய்துகொள்ளப்பட்ட தற்கொலைகள் என்பதும், சில வழக்குகளில் கொலைகள் என்பதும் தெரியவந்துள்ளது.  எனவே, சந்தேக மரண வழக்குகள் அனைத்தையும் தீவிரமாகப் புலனாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது.  வயிற்றுவலிக்காக யாராவது தற்கொலை செய்துகொள்வார்களா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  தலித்துகளின் மரணம் குறித்து தமிழகக் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே வெளிப்படுத்தியிருக்கும் இந்த உண்மை நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.  பதிவு செய்யப்பட்ட வழக்குகளே இத்தனை இருக்குமென்றால், பதிவு செய்யப்படாமல் போகும் தலித் மரணங்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுகிறது.

ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரம் சந்தேக மரணங்கள் என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் தலித்துகள் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

;சந்தேக மரணம் என்ற பெயரில் காவல்துறையால் மூடி மறைக்கப்படும் கொலைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த சந்தேக மரணங்கள் குறித்து விசாரித்து உண்மையை வெளிப்படுத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை: